பட்னாவிஸ்தான் முதல்வர்-ஷிண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவி தர பாஜக ரெடி..இழுபறி நீடிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர்..இதனை சிவசேனா தலைவரான இடைக்கால முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று பாஜக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
மேலும் தேவேந்திர பட்னாவிஸுக்கு கீழ் துணை முதல்வராக பணிபுரிய விருப்பம் இல்லை எனில் மத்திய அமைச்சர் பதவியை ஷிண்டேவுக்கும் தர தயாராக இருப்பதாகவும் பாஜக தரப்பு பேரம் பேசியிருப்பதாக மத்திய அமைச்சர் ராம்ஸ்தா அத்வாலே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 230 தொகுதிகளில் பாஜக கூட்டணி வென்றது. மகாராஷ்டிரா சட்டசபையில் பிரதான எதிர்கட்சியே இல்லை என்ற நிலைமை உருவாகி உள்ளது.
இத்தகைய பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற பாஜக கூட்டணியால் மகாராஷ்டிராவில் உடனடியாக ஆட்சியை அமைக்க முடியாத இழுபறி நீடிக்கிறது. இதற்கு காரணம் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்டுள்ள தகராறுதான். பாஜகவைப் பொறுத்தவரையில் அதிக இடங்களில் வென்றதால் இந்த முறை முதல்வர் பதவியை விட்டுத் தருவதாகவில்லை; தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்பதில் உறுதியாக இருக்கிறது; ஆனால் சிவசேனா தலைவ ஏக்நாத் ஷிண்டே, பீகாரில் குறைவான இடங்களில் வென்ற நிதிஷ்குமாரை பாஜக முதல்வராக ஏற்றுக் கொண்டிருக்கிறதுதானே.. அப்படியானால் நானே தொடர்ந்தும் முதல்வராக நீடிக்கிறேன் என அடம் பிடிக்கிறார். தேசியவாத காங்கிரஸ் தலைவரான அஜித் பவாரோ, தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. புதிய ஆட்சி அமையாத நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் சூழ்நிலை உருவானது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு இடைக்கால முதல்வராக்கப்பட்டார். இந்த நிகழ்வால் அரசியல் சாசன சிக்கல் எழவில்லை.
இதனிடையே முதல்வர் பதவி விவகாரத்தில் சுமூகத் தீர்வு ஏற்படுத்த ஷிண்டேவுடன் பாஜக தரப்பு தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்கிறது பாஜக. ஷிண்டேவோ விட்டுத் தருவதாக இல்லை. அஜித்பவார் இந்தப் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். தேவேந்திர பட்னாவிஸ் கீழ் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பணியாற்ற விரும்பவில்லை எனில் மத்திய அமைச்சர் பதவியை தரவும் பாஜக தயாராக இருக்கிறது. இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு உருவாகும் என்றார்.