வடக்கு - தெற்கு என்ற பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் அமித்ஷா.!
அமித்ஷா
தொகுதி மறுவரையறை மசோதா விவாதத்தில் பதிலுரை அளித்து வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "வெற்று விளம்பரத்திற்காக வடக்கு, தெற்கு என்ற அரசியலை எதிர்க்கட்சியினர் செய்கின்றனர்.
வடக்கு, தெற்கு என்ற பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விவாதிக்கப்பட்டுவருகிறது. இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசிய நிலையில், மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்து பேசினார்.
மக்களவையில் அமித்ஷா பேசியதாவது; "மகளிர் இட ஒதுக்கீட்டை இந்தியா கூட்டணி எதிர்க்கிறது. மத்திய அரசு அமல்படுத்தும் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. 2029 மக்களவைத் தேர்தலில் 33% மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கு 50% தொகுதிகள் அதிகரிக்கும்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை நிர்ணயித்தால் தமிழ்நாடு பாதிக்கும். தெற்கு, வடக்கு என பிரிக்கும் அரசியல் இங்கு எடுபடாது. வெற்று விளம்பரத்திற்காக வடக்கு, தெற்கு என்ற அரசியலை எதிர்க்கட்சியினர் செய்கின்றனர். வடக்கு, தெற்கு என்ற பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவியேற்ற பிறகு தெற்கு, வடக்கு என பார்க்க முடியாது" இவ்வாறு அவர் பேசினார்.
