போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அவிநாசி சாலையில் புதிய மேம்பாலம்.!

கோவை

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அவிநாசி சாலையில் புதிய மேம்பாலம்.!

கோவை மாநகரில் கடந்த 20 வருடங்களில் மக்கள் தொகை நெருக்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கோவையின் இதயப்பகுதியான அவினாசி சாலை, சென்னை அண்ணா சாலைக்கு நிகராக நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோவை-அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,791 கோடியில் மேம்பால கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இந்த மேம்பாலம் கட்டும் பணி 93 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறினார்கள்.

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவை, கடந்த 20 ஆண்டுகளில் எல்லா நகரங்களையும் தாண்டி முன்னேறி வருகிறது. பக்கத்தில் உள்ள திருப்பூரும் இரட்டை நகரம் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. கோவையில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மக்கள் தொகை வளர்ச்சியும் வாகன நெருக்கமும், தமிழ்நாட்டில் சென்னையை தவிர வேறு எங்குமே இன்று வரை ஏற்படவில்லை.

கோவை மாநகரில் முன்பு எல்லாம் திரும்பிய பக்கம் எல்லாம் தொழிற்சாலைகள் இருக்கும். அவை அனைத்தும் ஊருக்கு வெளியே செல்லும் அளவிற்கு மக்கள் தொகை அதிகமாகிவிட்டது. கோவை மாநகரம் கல்லூரிகளின் நகரமாகவும், சிறு குறு தொழில்களின் தாயகமாகவும் இருப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். கேரளாவின் நுழைவு வாயிலாகவும் இருக்கிறது.

கோவையில் தற்போதைய நிலையில் 35 லட்சம் மக்கள் இருப்பார்கள் என கூறப்படுகிறது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதே அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால் பல சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு விட்டன. பல சாலைகளின் சிக்னல்கள் நீக்கப்பட்டுவிட்டன. மேம்பாலங்களும் போடப்பட்டு விட்டன. ஆனாலும் நெரிசல் குறைந்தபாடில்லை.. கோவையின் இதயப்பகுதியான அவினாசி சாலையில் நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நெரிசலை குறைக்க வேண்டும் என்றால், அவினாசி சாலை முழுவதுமே மேம்பாலம் போட்டால் தான் தீரும் என்ற நிலை இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட அரசு அதற்கான பணியில் இறங்கியது. அதன்படி, கோவை-அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,791 கோடியில் மேம்பால கட்டுமானப்பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இதற்காக 300 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு, அதன்மீது தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மேம்பாலம் கட்டும் பணி தற்போது வரை 93 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மேம்பால பணிகளை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தார்கள். கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள இறங்கு தளம் விமான நிலையம் அருகே உள்ள ஏறுதளம், இறங்குதளம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மீதம் உள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் உத்தரவிட்டார்.

கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள பிரதான ஏறுதளம் மற்றும் கோல்டுவின்ஸ் பகுதியில் பிரதான இறங்குதளம் பணிகள் முடிவடையும் நிலையில உள்ளது. இதேபோல் ஜி.கே.என்.எம். மருத்துவமனை சிக்னல், பீளமேடு, விமானநிலையம் ஆகிய இடங்களில் வாகனங்கள் ஏறிசெல்லவும், இறங்கி செல்லவும் தளங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போதைய நிலையில் பீளமேடு பகுதியில் ரயில்வே மேம்பாலத்திற்காக 52 மீட்டர் நீளத்தில் இரும்பு காரிடர்கள் அமைக்க வேண்டும். அதற்கு ரயில்வே அதிகாரிகள் அனுமதி தர வேண்டும். இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் (ஜூன்) தொடக்கத்தில் ரயில்வே அதிகாரிகள் அனுமதி தருவார்கள் என்று கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும் இரும்பு காரிடர்கள் பொருத்தப்பட்டு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாம்.

மேலும் அடுத்த சில மாதங்களில் இந்த மேம்பாலம் உபயோகத்திற்கு வரும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.