தென்காசி கலெக்டர் அலுவலகத் திற்கு வெடிகுண்டு மிரட்டல் .!
தென்காசி

தென்காசி கலெக்டர் அலுவலகத் திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தீவிர சோதனை - பரபரப்பு
தென்காசி, மே - 07
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்ததை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் மற்றும் ஏராளமான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து, தென்காசி பிரிக்கப்பட்டு தற்போது தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்ட ஆட்சியரகம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.
இங்கு தினந்தோறும் அதிகளவில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக வந்து செல்கின்றனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுகுறித்த மிரட்டல் ஆட்சியர் அலுவலகத்தின் மின்னஞ்சலுக்கு வரப்பெற்றது. இதையடுத்து, போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தினர். மேலும், இதுகுறித்து வெடி குண்டுகள் செயலிழப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
இதையடுத்து, அந்தப் பிரிவினர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், அலுவலக வளாகத்திலும் மோப்ப நாய்களுடன் வெடி குண்டு சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தென்காசி புதிய பேருந்து நிலையத்திலும் வெடி குண்டு சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை எனவே இது வெறும் மிரட்டல் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இமெயில் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருந்து வரும் ஆனந்தன் அய்யாசாமிக்கும் மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது பற்றி ஆனந்தன் அய்யாசாமி தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்
AGM கணேசன்