நான்கு சக்கர வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நலச் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் .!
தென்காசி

தென்காசி நான்கு சக்கர வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நலச் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தென்காசி, ஏப் :- 29
தென்காசியில் தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பு, தென்காசி நான்கு சக்கர வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நலச் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட தலைவர் செல்வ சுப்பிரமணியன் தலைமையில்,
பாப்புலர் ராயப்பா ராஜா, செயலாளர் முகமது மைதீன், பொருளாளர் ராஜன் ஆகியோர் முன்னிலையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தின் சிறு குறு வாகன வணிகர்களின் நலன் கருதி 1989 சட்டப்பிரிவு 430 ன் படி கடன் பதிவு நீக்குதல் பெயர் மாற்றம் போன்ற பணிகளுக்கு எங்கள் வாகன வணிகர்களால் வழங்கப்படும் ஆவணங்களை அதன் உரிமையாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட கடிதம் கொடுத்து ஆவணங்களை நாங்களே அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளும் பழைய நடை முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்,நாடு முழுவதும் கணினி மையமாக்கப்பட்ட பின்பும் ஆவண அலுவல் பணிகள் மிகவும் காலதாமதமாகிறது எனவே வாகன வணிகர்களின் சிரமம் கருதி எங்களால் வழங்கப்படும் ஆவணங்களில் அலுவலகப் பணிகளை விரைந்து முடித்துக் கொடுக்க வேண்டும் எனவும், சிறிய அலுவலகம் மற்றும் ஆலோசகர்களாக செயல்படும் சிறு குறு வாகன வணிகர்களுக்கும் ஜிஎஸ்டி எண் அலுவலக விபரம் போன்ற விதிகளில் மாற்றம் செய்து எளிய முறையில் வாகன வணிக சான்றிதழ்கள் பெற ஆவணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாகவும் சிறு குறு வாகன வணிகர்களுக்கு எதிராகவும் மத்திய அரசால் கொண்டுவரப்படும்.
புதிய போக்குவரத்து சட்டங்களை மாநில வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களில் அமல்படுத்துவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி, பாவூர்சத்திரம் ஆலங்குளம் சிவகிரி வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட துணைச் செயலாளர்கள் செல்வம், ரவிக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, செந்தில், ஜெகன், குமார், பாலாஜி கண்ணன், யாசர், மணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்