வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் இறுதி ஆண்டு மாணவர்கள் இறுதியாண்டு விவசாய பயிற்சி.!
கிருஷ்ணகிரி

திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் இறுதி ஆண்டு மாணவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி கிராமப்புற விவசாய அனுபவ பயிற்சியைப் பெற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மாணவர்கள், ஜகதாப் கிராமத்தில் தென்னையின் முக்கிய பூச்சியான காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்துவதற்காக "ஒருங்கிணைந்த காண்டாமிருக வண்டு மேலாண்மை" என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
மேலும் பூச்சியின் சேதத்தை கண்டறிதல், அதன் வெவ்வேறு படிநிலைகளைக் கண்டறிதல் மற்றும் பல்வேறு மேலாண்மை முறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர்.
அதில் முக்கிய மேலாண்மை முறையான குறுத்துப் பகுதியில் வண்டு ஏற்படுத்தியத் துளைப்பகுதியில் மணல் மற்றும் வேப்பம் புண்ணாக்குப் போட்டு அடைத்தல், எருக்குழியில் இருக்கும் புழு நிலையை அழிக்க மெட்டாரைசியம் போன்ற இயற்கை உயிர்க்கொல்லி பூஞ்சானங்களைப் பயன்படுத்துதல், நீளமான இரும்புக்கம்பியைக் கொண்டு வண்டைக் குத்தி எடுத்தல், பூச்சிக்கொல்லிகளை வேர் ஊட்டம் மூலமாக செலுத்துதல், ஆமணக்கு புண்ணாக்கு வைத்து பூச்சியை கவர்தல் போன்ற தொழில்நுட்பங்களைத் தெரிவித்தனர்.
இதன் முக்கிய அம்சமாக வாளிப் பொறியை எடுத்து வந்து, அதன் செயல்பாட்டு முறையான பெண் வண்டு உற்பத்தி செய்யும் திரவத்தினை பொறியின் மேற்பகுதியில் வைத்து, அதன் மணத்தினை கவர்ந்து வரும் ஆண் பூச்சிகளைக் கொல்ல வாளியின் அடிப்பகுதியில் பூச்சிக்கொல்லியை வைத்துக் கொல்லுதல் மற்றும் அந்தப் பொறியினால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மையையும் எடுத்துரைத்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ