தென்காசி அருகே கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை .!
தென்காசி

தென்காசி அருகே கணவனை
கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு
தென்காசி, ஜூன் 10
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் கள்ளக் காதலில் ஏற்பட்ட தகராறில் கணவனை கொலை செய்த மனைவி உட்பட 3 பேருக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பசும்பொன் 2 ஆம் தெருவை சார்ந்தவர் பாலகிருஷ்ணன் என்பவரது மகன் கருப்பசாமி(வயது 45) இவரை கடந்த 30.08.2013 அன்று காணவில்லை என்று வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்ற மாரிச்சாமியை போலீசார் விசாரணை செய்த போது காணாமல் போன கருப்பசாமியின் மனைவி மகேஸ்வரி (வயது43) க்கும் மாரியப்பன் என்ற மாரிச்சாமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது பற்றி அறிந்த கருப்பசாமி மகேஸ்வரி, மாரிச்சாமி இருவரையும் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரி அவரது கள்ளக் காதலன் மாரியப்பன் (எ) மாரிச்சாமி இருவரும் கருப்பசாமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் இதற்காக திட்டமிட்டு மகேஸ்வரி, மாரியப்பன் என்ற மாரிச்சாமி, மகேஸ்வரியின் தந்தை வீரப்பன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பொன்ராஜ் ஆகியோர் சேர்ந்து கருப்பசாமியை கொலை செய்து மாரியப்பனின் தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குறிப்பிட்ட அந்த இடத்தை தோண்டி கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீசார் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மகேஷ்வரி, மகேஸ்வரியின் கள்ளக் காதலன் மாரியப்பன் (எ) மாரிச்சாமி மகேஸ்வரியின் தந்தை வீரப்பன் மற்றும் இல்லத்துப் பிள்ளைமார் தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவரது மகன் பொன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். நீதிபதி அவர்கள் நான்கு பேர்களையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேலு, கருப்பசாமியின் மனைவி மகேஸ்வரி அவரது தந்தை வீரப்பன், மகேஸ்வரியின் கள்ளக்காதலன் மாரியப்பன் என்ற மாரிச்சாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் ஆகியோர் திட்டமிட்டு கருப்பசாமியை கொலை செய்தது உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் எனவே அவர்கள் நான்கு பேர்களும் குற்றவாளிகள் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கின் குற்றவாளியான
மகேஸ்வரியின் தந்தை வீரப்பன் இறந்து விட்டதால் மீதமுள்ள மகேஸ்வரி, மாரியப்பன் என்ற மாரிச்சாமி, பொன்ராஜ் ஆகிய
மூன்று நபர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கில் மகேஸ்வரி மற்றும் மாரியப்பன் என்ற மாரிச்சாமி இருவருக்கும் தலா ரூபாய் 3000 அபராதமும், பொன்ராஜ்க்கு ரூபாய் 4000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் குட்டி (எ) மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.
செய்தியாளர்
AGM கணேசன்