உலகில் பலர் சாகப் போகிறார்கள் - பில்கேர்ட்ஸ் எச்சரிக்கை.!
உலகம்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் DOGE தலைவர் எலான் மஸ்க்-கின் செயலுக்கு பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இவர்களின் செயலால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா பொதுவாக உலக நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும். பல திட்டங்கள், வளர்ச்சி பணிகளுக்கு நிதி உதவி வழங்கும். இதை சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதி என்று அழைப்பார்கள்.
இந்த நிலையில்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதியை முடக்கும் முடிவை எடுத்து உள்ளார். இதனால் உலக வளர்ச்சி எதற்கும் அமெரிக்கா நிதி உதவி அளிக்காது. இதனால் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா பெற்று வந்த நிதியும் பாதிக்கப்படும். சுகாதாரம் மற்றும் பிற திட்டங்கள் தொடர்பாக இந்தியா பெற்று வந்த நிதி பாதிக்கப்படும் என்பதால் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அரசின் நிறுவனத்தை (USAID) மூடப்போவதாக தொழிலதிபரும் அரசின் D.O.G.E அமைப்பின் தலைவருமான எலான் மஸ்க் அறிவித்ததற்கு MICROSOFT நிறுவனர் பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். USAID மூலமாக மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் வளர்ச்சி நிதி நிறுத்தப்பட்டால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு வழிவக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் அமெரிக்க நிதியில் இந்தியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொண்டு நிறுவன செயல்பாடுகள், சில அரசு செயல்பாடுகள் என்று எல்லாம் முடக்கப்பட்டு உள்ளன. USAID எனப்படும் இந்த நிதி காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்தியாவிற்கான USAID நிதி:
USAID இந்தியாவில் பணிபுரியும் அதன் ஒப்பந்த திட்டங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
USAID இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல பணிகளை செய்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், USAID மூலம் இந்தியா $140 மில்லியனைப் பெற உள்ளது. கடந்த ஆண்டு இதே தொகையை பெற்றது. இதை எல்லாம் இந்தியா மொத்தமாக இழக்கும். அதாவது கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை இந்தியா இழக்கும்.
2023-24 நிதியாண்டில், USAID ஒதுக்கீடு மூலம் இந்தியாவின் அரசு மற்றும் சிவில் சமூக திட்டங்களுக்கு $6.8 மில்லியன், சுகாதாரத்திற்காக சுமார் $55 மில்லியன்; சுற்றுச்சூழலுக்கு $18 மில்லியன், மற்றும் சமூக உள்கட்டமைப்புக்கு $7.8 மில்லியன் என ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீடு அப்படியே முடக்கப்பட்டது. பெரும்பாலும் அமெரிக்காவின் நிதி உதவி இந்தியாவில் சுகாதார திட்டங்களுக்கே பயன்படுத்தப்படும்.
1990 முதல், USAID இந்தியாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற இந்த திட்டங்கள் உதவி உள்ளன. 25,000 நிமோனியா இறப்புகள் மற்றும் 14,000 வயிற்றுப்போக்கு இறப்புகள் USAID நிதி மூலம் தடுக்கப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
காசநோயை சிறப்பாகக் கண்டறியவும், குணப்படுத்தவும் மற்றும் தடுக்கவும் USAID இந்திய அரசுக்கு சிறப்பு நிதிகளை வழங்கி உள்ளது. இந்தியா காசநோயை தடுக்க இந்த நிதி பெரிய அளவில் உதவியது. இதைத்தான் அமெரிக்கா நிறுத்தி உள்ளது. எச்.ஐ.வி ஆபத்தில் உள்ள மக்களைத் தடுப்பதற்கும் பராமரிப்பதற்கும் கூட இந்த நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் 2007ஆம் ஆண்டிலிருந்து எய்ட்ஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை 32 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அமெரிக்காவின் நிதியே காரணம்.
COVID-19 தொற்றுநோய்களின் போது, USAID கிட்டத்தட்ட $13.1 மில்லியன் நிதியுதவியை இந்தியாவிற்கு அளித்தது. இந்த நிதி எல்லாம் ஒரே அடியாக தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் சுகாதார ரீதியாக, சமூக நலத்திட்டங்கள் ரீதியாக இந்தியா கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்காவின் இந்த முடிவை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளும். என்ன மாதிரியான பதிலடியை இந்தியா கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் கேள்வி எழுந்துள்ளது.