ஆணவத்தின் உச்சத்தில் டிரம்ப்.. ரஷ்யா - சீனா - இந்தியா என்ன செய்யப்போகிறது? பிரிக்ஸ் நாடுகளுக்கு சவால்.!

உலகம்

ஆணவத்தின் உச்சத்தில் டிரம்ப்.. ரஷ்யா - சீனா - இந்தியா என்ன செய்யப்போகிறது? பிரிக்ஸ் நாடுகளுக்கு சவால்.!

வாஷிங்டன்: இந்தியா, ரஷ்யா, சீனா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் 'பிரிக்ஸ்' கூட்டமைப்பை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவமதித்து வருகிறார்.

பிரிக்ஸ் நாடுகள் செத்துப்போய்விட்டது என்று கூறிய அவர் எனது மிரட்டலுக்கு பயந்து பிரிக்ஸ் நாடுகள் சிதைந்துவிட்டன என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

உலகளவில் நாடுகளின் பாதுகாப்பு, வர்த்தக உறவுக்காக பல்வேறு நாடுகள் இணைந்து கூட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன. அந்த வகையில் முக்கியமான ஒரு கூட்டமைப்பு தான் பிரிக்ஸ். இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா இல்லை.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் மொத்தம் 10 நாடுகள் உள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

அமெரிக்காவுக்கு இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது பெரும் சவாலாக உள்ளது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசுகளுடன், வளரும் நாடான இந்தியா உள்ளது தான் அமெரிக்காவின் கண்களை உறுத்தி வருகிறது. இந்நிலையில் தான் பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சியை உருவாக்குவது பற்றி விவாதித்ததாக தகவல்கள் வெளியாகின. பொதுவாக உலக நாடுகள் மத்தியில் டாலரில் தான் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் தான் அமெரிக்க டாலரின் மதிப்பு என்பது தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதற்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகள் கரன்சியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதற்கு டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமின்றி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரானதுமே சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை குறைக்க நினைத்தால் அந்த நாடுகள் மீது 25 சதவீதம் மட்டுமில்லை 100 சதவீதம் மட்டுமின்றி 125 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார்.

இதற்கு இந்தியா, ரஷ்யா உள்பட பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள், 'பிரிக்ஸ் கரன்சியை' உருவாக்கும் திட்டம் இல்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனால் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளை சீண்டி வருகிறார். நேற்று மீண்டும் பிரிக்ஸ் நாடுகளை சீண்டும் வகையில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ''பிரிக்ஸ் நாடுகள் நம் நாட்டின் டாலரை ஒழித்து கட்ட முயற்சி செய்தன. டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை உருவாக்க விரும்பினர். நான் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நடவடிக்கையாக டாலருக்கு மாற்று நாணயம் உருவாக்கினால் பிரிக்ஸ் நாடுகளுக்கு 150 சதவீத வரி போடுவேன் என்று அறிவித்தேன். அதோடு அமெரிக்காவை மறந்துவிட வேண்டும் என்று அறிவித்தேன்.

அதன்பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. வரி விதிப்பு மிரட்டலுக்கு பிறகு பிரிக்ஸ் நாடுகளிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை'' என்று கூறியுள்ளார். முன்னதாக கடந்த 13ம் தேதி டொனால்ட் டிரம்ப் பிரிக்ஸ் பற்றி பேசியிருந்தார். அப்போது அவர், ''பிரிக்ஸ் என்பது செத்துப்போய்விட்டது. அமெரிக்க டாலருக்கு மாற்று கரன்சியை உருவாக்கி வர்த்தகம் செய்யும் நாடுகள் மற்றும் கூட்டமைப்புடன் அமெரிக்கா உறவில் இருக்காது'' என்று கூறினார். இப்போது மீண்டும் பிரிக்ஸ் நாடுகள் சிதைந்துவிட்டதாக சீண்டி வருகிறார்.

பிரிக்ஸ் என்ற கரன்சி உருவாக்கும் திட்டம் இல்லை என்று அந்த கூட்டமைப்பில் உள்ள இந்தியா, ரஷ்யா வெளிப்படையாக கூறிய நிலையில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் சீண்டுகிறார். பிரிக்ஸ் நாடுகளை அவமதிக்கும் வகையில் அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் உள்ளது. அதேபோல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நலன் என்ற பெயரில் தொடர்ந்து பல நாடுகளை சீண்டி வருகிறார்.

ஏற்கனவே உக்ரைன் போர் நிறுத்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளை அவர் ஒதுக்கி வைத்துள்ளார். இதனால் ஐரோப்பிய நாடுகள் டிரம்ப் மீது கடும் கோபத்தில் உள்ளன. அதேபோல் பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற விவகாரத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளன. இப்படியான சூழலில் தான் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளையும் அவர் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்.

டொனால்ட் டிரம்பின் இப்படியான செயலை ஒருபோதும் பிற நாடுகள் விரும்புவது இல்லை. இதனால் ஆணவத்தின் உச்சத்தில் செயல்படும் அமெரிக்கா மற்றும் அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு பிற நாடுகள் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள். இதனால் பிரிக்ஸ் கூட்டமைப்பு விவகாரத்தில் இந்தியா - சீனா - ரஷ்யா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.