இனி ஒவ்வொரு அமெரிக்கரும் எங்கள் இலக்கு என எச்சரிக்கை விடுத்த ஈரான் .!

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா

இனி ஒவ்வொரு அமெரிக்கரும் எங்கள் இலக்கு என எச்சரிக்கை விடுத்த ஈரான் .!

தெஹ்ரான்: கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் ஈரான் இடையே தாக்குதல் நடந்து வந்தன. இந்தச் சூழலில் இன்று அதிகாலை நேரடியாகவே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு அதிகரித்தது.

இதற்கிடையே ஒவ்வொரு அமெரிக்கரும் தங்கள் இலக்கு என்றும் டிரம்ப் புரிந்து கொள்ளும்படி பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தரப்பு எச்சரித்துள்ளது.

ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று முக்கிய அணு தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குப் பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் இராணுவ வீரரும் ஈரானின் இலக்கில் இருப்பதாக ஈரான் அரசு தொலைக்காட்சி எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு அமெரிக்கரும் இலக்கு

இது தொடர்பான வீடியோக்கலும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுப்பதைப் பார்க்க முடிகிறது. அதாவது ஈரான் மீது தாக்குதலை நடத்தி டிரம்ப் இந்த போரைத் தொடங்கி வைத்து இருப்பதாகவும் ஈரான் தக்க பதிலடியைத் தொடுத்து இந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

அந்த நிகழ்ச்சியில் மேலும், "ஈரான் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து அமெரிக்கா குற்றம் புரிந்துள்ளது. இந்த பிராந்தியத்தில் அதுபோன்ற தாக்குதல்களுக்கு இடமில்லை. அமெரிக்க அதிபரே, நீங்கள் தான் இதை ஆரம்பித்தீர்கள், நாங்கள் முடித்து வைப்போம்" என்று கூறுகிறார். அவர் இதுபோல கூறும்போது பின்னணியில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்கத் தளங்கள் குறித்த வரைபடம் ஒன்று ஒளிபரப்பப்பட்டு இருந்தது.

அமெரிக்க ராணுவ தளங்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்குப் பல ராணுவ தளங்கள் உள்ளன. குறிப்பாக அந்த பிராந்தியத்தில் மிகப் பெரிய தளமாக கத்தாரில் உள்ள அல் உடீத் விமானப்படைத் தளம் இருக்கிறது. இது தவிர பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படை தளம், ஈராக்கில் உள்ள அல் அசாத் மற்றும் ஹரீர் விமானப்படைத் தளம், தெற்கு சிரியாவில் உள்ள அல் தன்ஃப் ராணுவ தளம், குவைத்தில் உள்ள அலி அல்-சலேம் விமானப்படைத் தளம் மற்றும் அமீரகத்தில் அல் தஃப்ரா விமானப்படைத் தளம் என ஏகப்பட்ட ராணுவ தளங்கள் உள்ளன.

பதிலடி மோசமாக இருக்கும்

அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து இந்த பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் மற்றும் ராணுவ வீரரும் இப்போது ஈரானின் இலக்காக அதிகாரப்பூர்வமாகவே மாறிவிட்டதாக ஈரான் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. அதில் மற்றொரு செய்தியில், "போர் இப்போதுதான் ஆரம்பமாகி உள்ளது, டிரம்ப்! இப்போது நீங்கள் சமாதானத்தைப் பற்றிப் பேசுகிறீர்களா? நீங்கள் செய்த காரியத்தின் விளைவைப் புரிந்து கொள்ளும் வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவோம்" என மிரட்டல் விடுக்கும் வகையில் ஒளிபரப்பானது.

ஏன் முக்கியம்

ஈரான் அரசு அல்லது அமைச்சர்கள் அதிகாரப்பூர்வமாக இந்த எச்சரிக்கையை விடுக்கவில்லை. ஆனால், ஈரானின் இந்த ஊடகம் நேரடியாக அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டிலேயே வருகிறது. இதனால் இதில் வரும் செய்திகள் ஈரானின் செய்திகளாகவே கருதப்படுகிறது. மேலும், ஈரானின் இந்த அரசு ஊடகத்தைக் குறிவைத்தும் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கப் படைகள் ஈரானின் மூன்று முக்கிய அணு சக்தி மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. ஈரான் சமாதானத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், இன்னும் பேரழிவு தரும் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.