இது தான் கிரிக்கெட். ! கடைசி ஓவரில் ட்விஸ்ட் கொடுத்த டயால்.! ஆர்.சி.பி. 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி. !

கிரிக்கெட்

இது தான் கிரிக்கெட். ! கடைசி ஓவரில் ட்விஸ்ட் கொடுத்த டயால்.! ஆர்.சி.பி. 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி. !

பெங்களூர்: ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது.

அதிரடியாக ஆடிய ரொமாரியோ ஷெப்பர்ட் 14 பந்துகளில் 6 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 53 ரன்களை விளாசி தள்ளினார்.

ஒரே ஓவரில் 26 ரன்கள்

2019ஆம் ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணி 180 ரன்களுக்கு மேல் ஒருமுறை கூட சேஸிங் செய்ததில்லை. இந்த நிலையில் 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆயுஷ் மாத்ரே - ஷேக் ரஷீத் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 2 ஓவர்கள் நிதானமாக ஆடிய நிலையில், ஷேக் ரஷீத் 3வது ஓவரில் அதிரடியை தொடங்கினார். பின்னர் புவனேஷ்வர் குமார் வீசிய 4வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே 26 ரன்களை விளாசி தள்ளினார்.

2 விக்கெட்டுகள்

இதன்பின் ஆட்டம் சூடுபிடித்த நிலையில், ஷேக் ரஷீத் 14 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சாம் கரண் 5 ரன்களில் பெவிலியன் சென்றார். இதனால் சிஎஸ்கே அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கிஉ 58 ரன்களை சேர்த்தது. இதன்பின் ஆயுஷ் மாத்ரே - ஜடேஜா கூட்டணி இணைந்தது. ஜடேஜா முதல் பந்தில் இருந்தே பவுண்டரி அடிப்பதில் மும்முரம் காட்டினார்.

ஆயுஷ் மாத்ரே அரைசதம்

அதற்கேற்ப இங்கிடி, சுயாஷ் சர்மா, க்ருணால் பாண்டியா என்று யார் பவுலிங் செய்தாலும் ஒரு பவுண்டரியை அசால்ட்டாக விளாசி வந்தார். மறுபக்கம் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடி 25 பந்துகளில் அரைசதம் அடிக்க, 9 ஓவர்களில் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 88 ரன்களாக உயர்ந்தது. இந்த நிலையில் ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய 10வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே 6, 6, 4 என்று 18 ரன்களை விளாசி தள்ளினார்.

ஜடேஜா அதிரடி

இதன்பின் சுயாஷ் சர்மா வீசிய 11வது ஓவரில் ஜடேஜா 6, 4 உட்பட 15 ரன்களை விளாச, தொடர்ந்து ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி அடிக்கப்பட்டது. இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 14 ஓவர்களிலேயே 150 ரன்களை எட்டியது. இதன் காரணமாக ஆர்சிபி அணி பந்தை மாற்றியது. இந்த நிலையில் 15வது ஓவரை வீச புவனேஷ்வர் குமார் அழைக்கப்பட்டார்.

இங்கிடி ட்விஸ்ட்

அந்த ஓவரில் ஆயுஷ் மாத்ரே ஒரு சிக்ஸ் அடிக்க, அவர் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் லுங்கி இங்கிடி வீசிய 17வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே 48 பந்துகளில் 6 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 94 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த பிரெவிஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

தோனி என்ட்ரி

அப்போது சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 35 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது ஜடேஜா - தோனி களத்தில் இருந்தனர். சுயாஷ் சர்மா வீசிய 18வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவர்

அந்த ஓவரை வீச யாஷ் தயாள் வந்தார். அந்த ஓவரின் 3வது பந்தில் தோனி 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 3 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டிய தேவை வந்தது. அப்போது சிவம் துபே களம் புகுந்தார். 4வது பந்தில் சிவம் துபே சிக்ஸ் அடிக்க, அந்த பந்து நோ-பால் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த பந்தில் 1 ரன் சேர்க்கப்பட, 2 பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. பின் 5வது பந்தில் 1 ரன் எடுக்கப்பட, கடைசி 1 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் சிவம் துபே இருக்க, அந்த பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டதால், ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.