ஒரே ஓவரில் பிரெவிஸ் செய்த சம்பவம்.! தடுமாறிய கொல்கத்தா.! வென்றது சி எஸ் கே.!
விளையாட்டு

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை சேர்த்தது.
சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் ஆயுஷ் மாத்ரே - கான்வே கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
இதில் வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரிலேயே இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே டக் அவுட்டாகி வெளியேற, உடனடியாக உர்வில் படேல் களமிறங்கினார். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க, அந்த ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் மொயின் அலி அட்டாக்கில் வர, அந்த ஓவரில் உர்வில் படேல் 6, 4, 6 என்று விளாசி அசத்தினார். ஆனால் அந்த ஓவரின் 5வது பந்தில் கான்வே டக் அவுட்டாகி வெளியேறினார்.
உர்வில் படேல் அதிரடி
அப்போது ஆச்சரியமளிக்கும் வகையில் அஸ்வின் களமிறக்கப்பட்டார். ஒரு பக்கம் அஸ்வின் நிதானம் காட்ட, உர்வில் படேல் அதிரடியில் விளாசி தள்ளினார். ஹர்சித் ராணா வீசிய 3வது ஓவரிலும் 6 அடிக்க, கடைசி பந்தில் வருண் சக்கரவர்த்தியின் அபார கேட்சால் உர்வில் படேல் 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி களத்தில் இருந்தது.
5 விக்கெட்டுகள்
பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி கொள்ள நினைத்து ஜடேஜா அதிரடியாக ரன்களை சேர்க்க, தேவையில்லாமல் அஸ்வினும் ரன் சேர்க்க முயற்சித்து 8 ரன்களில் வெளியேற, வருண் சக்கரவர்த்தி வீசிய 6வது ஓவரில் ஜடேஜாவும் 19 ரன்களில் வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது பிரெவிஸ் - சிவம் துபே கூட்டணி இணைந்தது.
பிரெவிஸ் சம்பவம்
இதனைத் தொடர்ந்து சுனில் நரைன் அட்டாக்கில் கொண்டு வரப்பட, சிவம் துபே நிதானமாக ஆட தொடங்கினார். ஆனால் பிரெவிஸ் கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாமல் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசினார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 93 ரன்களை எட்டியது. இந்த நிலையில் வைபவ் அரோரா வீசிய 11வது ஓவரில் 6, 4, 4, 6, 6, 4 என்று 30 ரன்களை பிரெவிஸ் விளாசி தள்ளினார்.
சிவம் துபே - தோனி
இதன் மூலமாக பிரெவிஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்த அசத்த, ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கைகள் ஓங்கியது. ஆனால் வருண் சக்கரவர்த்தி பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று பிரெவிஸ் 25 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சிவம் துபே - தோனி கூட்டணி இணைந்தது. இருவரும் நிதானமாக ரன்கள் சேர்க்க, சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 5 ஓவர்களில் 40 ரன்கள் தேவையாக இருந்தது.
19வது ஓவர் பரபரப்பு
அடுத்த 3 ஓவர்களில் சிஎஸ்கே அணி 22 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 18 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது வைபவ் அரோரா வீசிய 19வது ஓவரில் 10 ரன்கள் சேர்த்த போதும், சிவம் துபே மற்றும் நூர் அஹ்மத் ஆட்டமிழந்தனர். இதனால் சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது.
தோனி ஃபினிஷிங்
அப்போது தோனி ஸ்ட்ரைக்கில் இருந்தார். கேகேஆர் அணி தரப்பில் கடைசி ஓவரை வீச ரஸ்ஸல் வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே தோனி சிக்ஸ் அடிக்க, 3வது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அன்சுல் கம்போஜ் பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலமாக சிஎஸ்கே அணி நீண்ட நாட்களுக்கு பின் வெற்றிபெற்றுள்ளது. மேலும், இந்த தோல்வியால் கேகேஆர் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.