ஜெயிலுக்கு சென்ற கைதியின் செல்போனிலிருந்து ஜீ பே மூலம் பணத்தை திருடிய பெண் எஸ்.ஐ சஸ்பெண்ட். !
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே உள்ளது மேக்களூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் பாலமுரளி. இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பாலமுரளியின் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
திருவண்ணாமலை எஸ்ஐ கவிதா
இதனையடுத்து போலீசாரும், அவரது கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.. அந்த சோதனையில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பாலமுரளியைக் கைது செய்தனர். பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது நடவடிக்கையின் போது, பாலமுரளியிடம் இருந்த காஸ்ட்லி செல்போனும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, தனது தண்டனை காலத்தை முடித்துக் கொண்ட பாலமுரளி, 3 மாதங்களுக்கு முன்பு ஜெயிலிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். வீட்டிற்கு சென்ற அவர், சில நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்திற்கு சென்று, பறிமுதல் செய்யப்பட்ட தனது செல்போனையும் திரும்பப் பெற்றார். ஆனால், உடனடியாக அந்த செல்போனை ஆன் செய்து பார்க்கவில்லை..
காஸ்ட்லி செல்போன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது செல்போனை இயக்கி பார்த்தபோதுதான் பாலமுரளி ஆடிப்போய்விட்டார்.. அதாவது அவரது வங்கி கணக்கில் இருந்த பணம் பெருமளவில் குறைந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.. உடனே பேங்க் அக்கவுண்ட்டை சரிபார்த்தபோது, அவர் ஜெயிலில் இருந்த காலக்கட்டத்தில், அதாவது அவரது செல்போன் காவல் நிலையத்தின் பாதுகாப்பில் இருந்தபோது, ஜிபே மூலம் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பல தவணைகளாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
தான் ஜெயிலில் இருந்தபோது தனது போனைப் பயன்படுத்தி யாரோ பணத்தைத் திருடிவிட்டார்கள் என்பதால் பாலமுரளி, இது குறித்து ஆன்லைன் வாயிலாகத் தமிழக டிஜிபி-க்கும், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி சுதாகருக்கும் விரிவான புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட எஸ்பி சுதாகர், இந்தப் பணப்பரிமாற்றம் குறித்துத் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
ஜி-பே பணம்
சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், பாலமுரளியின் செல்போனில் இருந்து பணம் எங்கே சென்றது என்பது குறித்த ஆதாரங்கள் கிடைத்தன.
அதில், கீழ்பென்னாத்தூர் போலீஸ் ஸ்டேஷ்னில் பணியாற்றி வந்த பெண் எஸ்.ஐ. கவிதா, பாலமுரளியின் செல்போனைத் தவறாகப் பயன்படுத்தி, அவரது வங்கி கணக்கிலிருந்து தனது உறவினர் ஒருவரின் செல்போன் நம்பருகக பணத்தை பரிமாற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரியே, காவல் நிலையத்திற்குள் வைத்தே ஒரு கைதியின் பணத்தைக் கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலமானது.
ஷாக்கில் போலீஸ்
விசாரணையில் எஸ்.ஐ. கவிதாவின் மோசடி உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்ட எஸ்பி சுதாகர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அரசு ஊழியராக இருந்து கொண்டு நம்பிக்கைத் துரோகம் மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட பெண் எஸ்.ஐ. கவிதாவைப் பணியிடை நீக்கம் (செய்து உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் உடைமைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரே இது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
