சாய் சுதர்சன் இந்திய அணியில் வேண்டவே வேண்டாம்.! கம்பீர் பிடிவாதம்.!

கிரிக்கெட்

சாய் சுதர்சன் இந்திய அணியில் வேண்டவே வேண்டாம்.! கம்பீர் பிடிவாதம்.!

இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம் பெற்றிருக்கும் நிலையில், அவரை அணியில் சேர்க்கக்கூடாது என அணித் தேர்வின் போது தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மறுப்பு தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன் பின்னர், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், சாய் சுதர்சனுக்காக சுமார் அரை மணி நேரம் வாதாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது பிசிசிஐ வட்டாரத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் கம்பீர் எதற்காக சாய் சுதர்சனை அணியில் சேர்க்க மறுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரஞ்சி டிராபி தொடரிலும், இங்கிலாந்து கவுன்டி டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக ரன் குவித்து வருகிறார்.

மேலும், அதிரடியாக விளையாட வேண்டிய டி20 தொடரான ஐபிஎல்-லும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில் கேப்டன்சியில் விளையாடிய சாய் சுதர்சன், ஐபிஎல் தொடரின் அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார்.

ஒரே நேரத்தில் டெஸ்ட் போட்டி, டி20 என இரண்டிலும் முத்திரைப் பதித்திருக்கும் சாய் சுதர்சனை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்பதே ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை அனைவரின் விருப்பமாகவும் இருந்தது. ஆனால், தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரண்டு டாப் ஆர்டர் வீரர்கள் ஓய்வை அறிவித்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதால், அவர்களுக்கு இணையாக நிலையாக ரன் குவிக்கக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் உடனடியாகத் தேவை.

சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகிய மூவரும் டெஸ்ட் அணியில் டாப் ஆர்டரில் ஆடக்கூடியவர்கள் என்றாலும், மாற்று வீரர்கள் என்ற அடிப்படையில், சாய் சுதர்சனுக்கு இந்திய அணிக்குள் இடம் அளித்து ஆக வேண்டிய அவசியம் இருந்தது. அவர் முதல் நான்கு வரிசையிலும் பேட்டிங் செய்யும் ஆற்றல் உடையவர் தான்.

ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக கௌதம் கம்பீர் சாய் சுதர்சனை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். பின்னர் சுப்மன் கில் தான், அவருடன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வரும் அனுபவத்தை கௌதம் கம்பீரிடம் பகிர்ந்து இருக்கிறார்.

சுமார் அரை மணி நேரம் சாய் சுதர்சனின் திறமையைப் பற்றியும், அவர் எந்த வகையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு உதவிகரமாக இருப்பார் என்பதையும் விளக்கியிருக்கிறார் சுப்மன் கில். அதன் பிறகு தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்க்கரும் சாய் சுதர்சனை சேர்ப்பதற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.

இதன் முடிவில் தான் கௌதம் கம்பீர் அவரை அணியில் சேர்க்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இதே போன்ற ஒரு பிரச்சனை எழுந்தது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கக் கூடாது என கௌதம் கம்பீர் எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் அஜித் அகர்க்கர் மற்றும் ரோகித் சர்மா, கம்பீரை சமாதானம் செய்து ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் சாம்பியன்ஸ் டிராபியில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ரன் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது சாய் சுதர்சன் விஷயத்திலும் நடந்திருக்கிறது.