விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இலவசமாக மாம்பழம் மற்றும் தக்காளி பைகளை கொடுத்த விவசாயிகள்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது மாங்காய் மற்றும் தக்காளிகளுக்கு மத்திய மாநில அரசுகள் உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் தக்காளி, மற்றும் மாம்பழங்களை கூவி கூவி பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது,
மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனுக்களை கொடுத்தனர்.
அப்போது கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதை தடுக்க வேண்டும், வீரியமற்ற பூச்சிக்கொல்லி மருத்துக்கள் விற்பனை செய்வதை தடுக்கப்பட வேண்டும், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஏரியில் வண்டல் மண் எடுப்பதை விவசாயிகளின் டிராக்டர்களை காவல் துறையினர் பறிமுதல் செய்வதை நிறுத்த வேண்டும், வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக தக்காளி விளைச்சல் இருந்தும் அதற்கான விலைகள் கிடைப்பது இல்லை, மேலும் மாவட்டத்தில் தற்போது மாங்காய்க்கு உரிய விலைக் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆகையால் மாங்காய் மற்றும் தக்காளிகளுக்கு உரிய விலை நிர்ணையம் செய்ய மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டுமென வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் தலைமையில் விவசாயிகள் தக்காளி, மற்றும் மாங்காய்களை பொதுமக்களுக்கு கூவி, கூவி இலவசமாக வழங்கினார்கள்.
மாவட்ட செய்தியாளர்
மாருதி மனோ