கோவை,நீலகிரி மாவட்டத்திற்கு வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
President, Murmu,
கோவைக்கு வரும் குடியரசு தலைவர்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் நவம்பர் 27ஆம் தேதி நான்கு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
27 ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத் தளத்துக்கு வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார். ஒருவேளை வானிலை சரியாக இல்லையென்றால் சூலூரில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை வழி அல்லது எல்.அன்.டி. பைபாஸ் என சாலை மார்க்கமாக ஊட்டி ஆளுநர் மாளிகைக்கு செல்லவும் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
குடியரசு தலைவரை வரவேற்க அமைச்சர் செந்தில் பாலாஜி செல்வார் என தமிழ்நாடு அரசுக்கு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மறுநாள் நவம்பர் 28 ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் முப்படை பயிற்சிக் கல்லூரி விழாவில் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர். 29 ஆம் தேதி ஊட்டி ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுப்பவர், 30 ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலமாக சூலூர் விமானப் படைத் தளத்துக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவாரூர் மத்திய பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முர்மு… மீண்டும் திருச்சி திரும்பி அங்கிருந்தே விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். இதுதான் குடியரசுத் தலைவரின் பயணத் திட்டம். குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள் தமிழக போலீஸார்.