ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு துணை நிற்போம் - டாடா குழுமத் தலைவர் சந்திர சேகரன் .!

குஜராத்

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு துணை நிற்போம் - டாடா குழுமத் தலைவர் சந்திர சேகரன் .!

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் ஜூன் 12ம் தேதி நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பயணம் செய்தவர்களில் 241 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர், தனது மனைவியின் சாம்பலை கரைப்பதற்காக லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்திருந்தார். இவரது மறைவால், லண்டனில் 4 மற்றும் 8 வயதுடைய அவரது இரு குழந்தைகள் ஆதரவற்று நிற்கின்றனர். இந்தக் குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் உருக்கமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில் "இந்தக் குழந்தைகளின் துயரமான நிலையை அறிந்தவுடன் மனம் உருகிவிட்டது. தாய், தந்தையை இழந்து நிர்கதியாக நிற்கும் இந்த 4 மற்றும் 8 வயது குழந்தைகளை காக்க, டாடா குழுமம் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தும். பண உதவி மட்டுமல்ல, அவர்களுக்கு தேவையான கல்வி, உளவியல் ஆதரவு, மற்றும் வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும் அறிந்து நிறைவேற்றுவோம்," என சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழந்தைகளின் உறவினர்கள் இல்லாத நிலையில், டாடா குழுமம் அவர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாவலரை நியமிக்கவும், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து அவர்களின் நலனை உறுதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

மேலும், குழந்தைகளின் கல்வி செலவுகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஒரு நீண்டகால நிதி திட்டத்தை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏர் இந்தியா, டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் நிறுவனமாகும். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் ஆதரவு வழங்குவது குறித்து சந்திரசேகரன் வலியுறுத்தினார். "இந்தக் குழந்தைகள் எங்கள் பொறுப்பு. அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான, மகிழ்ச்சியான எதிர்காலத்தை உறுதி செய்வது எங்கள் கடமை," எனக் கூறியுள்ளார்.