ஜீவசமாதி அடைந்ததாக கூறப்பட்ட நபரின் உடல் தோண்டியெடுப்பு.!

கேரளா

ஜீவசமாதி அடைந்ததாக கூறப்பட்ட நபரின் உடல் தோண்டியெடுப்பு.!
ஜீவ சமாதி

கேரளா திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடல் காவல் துறையினரால் இன்று (ஜன.16) தோண்டியெடுக்கப்பட்டது.

நெய்யத்திங்கராப் பகுதியின் கவுவிளக்கத்தில் கோபன் சுவாமி (வயது 69) என்பவரை ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் கூறி கடந்த வியாழக்கிழமை (ஜன.09) அன்று அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். மேலும், அவராகவே அன்று காலை 11 மணியளவில் அவரது சமாதி அமைந்துள்ள இடத்திற்கு நடந்து சென்று ஜீவசமாதி அடைந்துவிட்டதாகவும், அவரது உடலை பொதுமக்கள் யாரும் பார்க்கக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில் கோபன் சுவாமியின் உடல் தோண்டியெத்து உடற்கூராய்வு செய்ய அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த பணியை அதிகாரிகள் கடந்த ஜன.13 அன்று துவங்கியப்போது அந்நபரது குடும்பத்தினர் மற்றும் இந்து மத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

இதனால், அந்த இடமே பரபரப்பானதினால் கோபன் சுவாமியின் உடலை தோண்டியெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், கோபன் சுவாமியின் மரணத்திலும் அவரது இறுதி சடங்கு நடைபெற்ற முறையிலும் சந்தேகம் இருப்பதாக அவரது அக்கம்பக்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று (ஜன.16) காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டது. அப்போது, அவரது உடல் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும், அவரை சுற்றியிலும் விபூதி உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் வைப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், அவரது உடல் திருவனந்தப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஓ.வி. ஆல்பிரட் இ.ஆ.ப. கூறியதாவது,

கோபன் சுவாமியின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவரது உடல் கூராய்வு சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த சோதனை முடிந்தபின்னர் மீண்டும் அவரது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படும் எனக் கூறினார்.

ஏற்கனவே அவரது உடலை தோண்டுவதற்கு தடைவிதிக்கவேண்டும் என கோபன் சுவாமியின் குடும்பத்தினர் கேரள மாநில உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்,

ஆனால் மர்ம மரணங்களின் மீது அதிகாரிகள் நடவடிக்கையெடுப்பது அவர்களது அதிகார உரிமை எனக்கூறி தடைசெய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.