துப்பாக்கி விடு தூது.! பகத் சிங் - வரலாறு - பாகம் - 1
வரலாறு

மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். அரசியல் அறிவையும் அவர்கள் பெற வேண்டும்.
அரசியலில் ஈடுபட வேண்டிய சூழல் வரும் போது தயங்காமல் நேரடியாக களத்தில் இறங்க வேண்டும். - பகத் சிங
1931 மார்ச் 23 லாகூர் மத்திய சிறை...
தூக்கு தண்டனை கைதிகளுக்கான தனி ப்ளாக் அது. சூரியன் மறைந்து கொண்டிருந்த நேரம். பெரும்பாலும் அந்தப் பகுதி அமைதியாகவே இருந்தது.
மரணத்தை கண்டு பயந்தவர்களின் அமைதியல்ல அது. தாய்நாட்டிற்கு விடுதலை வாங்கி கொடுக்காமல் வாழ்க்கை முடிந்து போகிறதே என்ற வருத்தம் கலந்த அமைதி.
அக்பர் கான் அந்த நீண்ட வராந்தாவில் வேக வேகமா நடந்து வந்தார்.பகத் சிங்கை அழைத்து 'வா' என்று உத்தரவு. நாளை காலையில் தான் தூக்கிலிடுவதாக இருந்தது. வெளியில் மக்கள் திரண்டிருப்பதை பார்த்த மேலதிகாரி எதுவும் பிரச்சினை வரப் போகிறது என நினைத்து இன்றே தூக்கிலிட உத்தரவு கொடுத்து விட்டார். மொத்தம் மூன்று நபர்கள் பகத் சிங்கையும் சேர்த்து.
பகத் சிங்கின் அறை வந்தது.
பகத் சிங் உன்னுடைய தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிவிட்டு நின்றார் அக்பர் கான்.
பகத் சிங்கிடம் எந்த வித மாற்றமும் தெரியவில்லை. கையில் வைத்திருந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடாமல் அப்படியே வைத்தார் பகத் சிங்.
இப்போது தான் பொழுது சாய்ந்திருக்கிறது. இந்நேரத்தில் தூக்கிலேற்றுவார்களா? தூக்கு தண்டனைக் கைதிகளை விடியற் காலையில் தான் தூக்கில் போட வேண்டும். இப்போதே எதற்குத் தூக்கில் போட வேண்டும்? நாளைக் காலைக்குள் ஏதாவது புரட்சி வெடித்து எங்களை காப்பாற்றி விடப் போகிறதா? அல்லது இந்த நாட்டுக்குதான் விடுதலை கிடைத்து விடப் போகிறதா?
வந்திருப்பவர் அக்பர் கான் இந்தியர். இவரிடம் என்ன கேட்க முடியும்.? மேலதிகாரிகள் உத்தரவிற்கு இவர் என்ன செய்வார்.? இதுவே பிரிட்டிஷ்காரராக இருந்தால் முரண்டு பிடிக்கலாம், எதிர்க்கலாம்.
பகத் சிங் அமைதியாக சொன்னார். இரண்டு தோழர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். பிறகு வாருங்கள் எனக் கூறிவிட்டு மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்து போனார் பகத் சிங்.
அவர் படித்துக் கொண்டிருந்தது லெனின் எழுதிய ஒரு புத்தகத்தை,
தலைப்பு அரசும் புரட்சியும் எப்படி அமைய வேண்டும்?
மு.ர. தொடரும்