'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா : மாநிலங்களவை ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்ற பாஜக திட்டம் !

One nation one election

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா : மாநிலங்களவை ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்ற பாஜக திட்டம் !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.

இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதே போல ஒன்றிய அரசு கலைக்கப்பட்டாலோ அல்லது அது பெரும்பான்மை இழந்தாலோ அப்போதும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்படும் நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக இதற்கு எதிர் கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நடப்பு நாடாளுமன்ற கூட்டத்திலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசியல் சாசன பிரிவு 82 ஏ, 83 பிரிவுகளில் கூடுதலாக ஒரு துணை பிரிவை சேர்க்க ஒரு மசோதா கொண்டு வரப்படுகிறது.

மேலும் மற்றொரு மசோதா யூனியன் பிரதேசங்களில் ஒரே தேர்தல் தொடர்பாக மூன்று சட்டங்களை திருத்துவதற்கு வழிவகை செய்கிறது. இந்த மசோதாக்கள் சாதாரண மசோதாக்களாக கொண்டு வருவதால் மாநிலங்களின் ஒப்புதல் பெற தேவை இல்லை என்று கூறப்படுகிறது.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் போதும் என்று சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.