அல்லு அர்ஜுனுக்கு நிம்மதி.. நெரிசலில் சிக்கி பெண் இறந்த வழக்கில் அதிரடி.. நீதிமன்றம் போட்ட உத்தரவு.!

சினிமா

அல்லு அர்ஜுனுக்கு நிம்மதி.. நெரிசலில் சிக்கி பெண் இறந்த வழக்கில் அதிரடி.. நீதிமன்றம் போட்ட உத்தரவு.!

ஐதராபாத்: 'புஷ்பா 2' திரைப்படம் பார்க்க சென்றபோது ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் இறந்தார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ் உள்பட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

இதையடுத்து நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் உருவானது. இந்த திரைப்படம் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படம் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பெரிய ஹிட்டாக அமைந்துள்ளது. அதேபோல் அவரது ரசிகர்களும் ஹேப்பியாகி உள்ளனர். ஆனாலும் கூட இந்த திரைப்படத்தால் அல்லு அர்ஜுன் கைதானார். அதாவது திரைப்படம் வெளியாகும் முந்தைய நாள் அதாவது டிசம்பர் 4ம் தேதி அதாவது 'புஷ்பா 2' திரைப்படம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதனை பார்க்க அல்லு அர்ஜுன் சென்றார்.

அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் போட்டிப்போட்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. அதில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து கோமா நிலையில் சிகிச்சையில் உள்ளார். இதுதொடர்பான புகாரில் அல்லு அர்ஜுன் மீது சிக்கடபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு கடந்த 13ம் தேதி அவரை கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள வீட்டுக்கு சென்று அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர்.

அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே தான் அல்லு அர்ஜுன் சார்பில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கும் அன்றைய தினம் விசாரிக்கப்பட்டதோடு, அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இருப்பினும் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் தொடர்பான ஆவணங்கள் சிறை அதிகாரிகளுக்கு உடனே செல்லவில்லை. காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஒருநாள் இரவில் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்தார். அதன்பிறகு டிசம்பர் 14ம் தேதி அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இதற்கிடையே தான் கூட்ட நெரிசலில் பெண் இறந்த வழக்கில் தனக்கு வழக்கமான ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அல்லு அர்ஜுன் சார்பில் நம்பள்ளி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தீர்ப்பு இன்று அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தான் இன்று மாலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் அல்லு அர்ஜுனுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

அதோடு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் 2 பாண்ட் பத்திரங்களை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதன்மூலம் அல்லு அர்ஜுனுக்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. ஏனென்றால் கர்நாடகா உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு 4 வாரம் காலத்துக்கு மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த இடைக்கால ஜாமீன் காலம் முடிவடைந்தால் அவர் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அல்லு அர்ஜுனுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து முழுவதுமாக தப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.