உதவி செய்வது போல் நடித்து முதியவரை ஏமாற்றி பணம் பறித்த நபருக்கு போலீஸ் வலை.!
சென்னை

பெரம்பூர்: புளியந்தோப்பு குட்டி தம்புரான் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (73). இவர் கடந்த 8ம் தேதி புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றார்.
அப்போது மிஷினில் பணம் எடுக்க முடியாததால், அங்கிருந்த நபரிடம், பணம் எடுத்து தரும்படி உதவி கேட்டுள்ளார். இதையடுத்த அந்த நபர், முதியவரிடம் இருந்து ஏடிஎம் கார்டை வாங்கி, ரூ.2 ஆயிரம் எடுத்து, கார்டுடன் பணத்தை கொடுத்துவிட்டு சென்று விட்டார். சிறிது நேரத்தில் ராமச்சந்திரனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.48 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக செல்போனில் குறுஞ்செய்தி வந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், தன்னிடம் இருந்த கார்டை பார்த்தபோது, அது தனது கார்டு இல்லை என்பது தெரிந்ததும். ஏடிஎம் மிஷினில் பணம் எடுத்து கொடுத்த அந்த நபர், ரகசிய குறியீடு எண்ணை தெரிந்துவைத்துக்கொண்டு, ராமச்சந்திரனின் கார்டுக்கு பதிலாக வேறு ஒரு கார்டை கொடுத்து அனுப்பியதும், பின்னர் அந்த கார்டை வைத்து, வேறு ஒரு ஏடிஎம் சென்று, ராமச்சந்திரன் வங்கி கணக்கில் இருந்த ரூ.48 ஆயிரத்தை அபேஸ் செய்தது தெரிந்தது. இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்படி, புளியந்தோப்பு போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரித்து வருகின்றனர்.