கூட்டுக் கொள்ளையில் பங்கு தராததால் கூட்டு களவாணியை கொன்ற நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை. !
சென்னை

சென்னை: கொள்ளையடித்த பணத்தை பிரித்து தராததால் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூட்டாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தரணி (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த கலைவாணனும் கடந்த 2015 மே 14ம் தேதி ஆந்திராவில் ஒரு காரிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்னை வந்தனர். கொள்ளையடித்த பணத்தை பிரித்து தருமாறு கலைவாணன் கேட்டுள்ளார். ஆனால், தரணி மறுத்துள்ளார். இதனால், தரணியை பழிவாங்க தனது நண்பர்களுடன் கலைவாணன் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், சேப்பாக்கம் எல்லீஸ் சாலையில் கடந்த 2015 ஜூன் 20ம் தேதி, தரணி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கலைவாணன் தனது கூட்டாளிகளுடன் வந்து, தரணியை சூழ்ந்து கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். சுதாரித்துக்கொண்ட தரணி அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். ஆனால், அவரை விரட்டி விரட்டி கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் தரணி இறந்துள்ளார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய திருவல்லிக்கேணி போலீசார், கேசவன் (24), ராஜேந்திரபிரசாத் (24), விஜி (25), ஸ்ரீகாந்த் (25), முகமது ரஹீம் (24), அஷிப் ஜேக்கப் (20), பாபு (19), பாபு (24), சந்துரு (25), கலைவாணன் (26) ஆகிய 10 பேரை கைது செய்து அவர்கள் மீது கொலை, கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை 19 கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை காலத்தில் கலைவாணன் இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மற்றவர்கள் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.தனசேகர் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் கேசவன், ராஜேந்திர் பிரசாத், விஜி, காந்த், ஆஷிப் ஜேக்கப்புக்கு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்