என்கவுண்டர் செய்யப்பட்ட வழிபறி கொள்ளையன்.! சென்னையில் பகீர்.!

சென்னை

என்கவுண்டர் செய்யப்பட்ட வழிபறி கொள்ளையன்.! சென்னையில் பகீர்.!

சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலகம் எதிரில், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இந்திரா, கடந்த 25-ம் தேதி காலை 6 மணியளவில் நடந்துச் சென்றார்.

அப்போது ஹெல்மெட், முகமுடி அணிந்து பைக்கில் வந்த இருவர், இந்திரா அணிந்திருந்த 2 சவரன் செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த இந்திரா, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அடுத்தடுத்து செயின் பறிப்பு

அதுதொடர்பாக போலீஸார் விசாரித்துக் கொண்டிருந்தபோது சென்னை சாஸ்திரி நகர் முதல் அவென்யூவில் வாக்கிச் சென்ற அடையாறு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி அம்புஜம்மாளிமிருந்து 3 சவரன் செயின் பறிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து அடுத்த 15-வது நிமிடத்தில் இந்திரா நகர், 29-வது குறுக்குத் தெருவில் நடந்துச் சென்ற திருவான்மியூரைச் சேர்ந்த லட்சுமி என்பவரிமிருந்து 8 சவரன் தங்கச் செயின் பறிக்கப்பட்டது.

பின்னர் வேளச்சேரி டான்சி நகரில் மேடவாக்கத்தைச் சேர்ந்த மூதாட்டி விஜயா என்பவரிடமிருந்து இரண்டு சவரன் செயின் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விஜயா நகர் வடக்கு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகம்மாளிடம் 3 சவரன் தங்கச் செயின் பறிக்கப்பட்டது. அடுத்து கிண்டி புத்துக்கோயில் அருகில் மூதாட்டி நிர்மலா என்பவரிடம் 10 சவரன் தங்கச் செயின் பறிக்கப்பட்டது.

செயின் பறிப்பு சம்பவங்கள் முழுவதும் தென்சென்னையிலேயே அடுத்தடுத்து நடந்ததால் காவல்துறையினரின் வாக்கி டாக்கிகள் அலறின. ஒரே நாளில் ஆறு பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக உயரதிகாரிகள் ஆக்‌ஷனில் களமிறங்கினர்.

கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக்

உடனடியாக வாகனச் சோதனை, சி.சி.டி.வி-க்கள் ஆய்வு செய்து செயின்பறிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர். அப்போது செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக், கர்நாடகா மாநில பதிவு நம்பர் எனத் தெரியவந்தது. அதோடு கொள்ளையில் ஈடுபட்டவர்களின் டிரஸ் கோடிங்கை சி.சி.டி.வி-யில் பார்த்த தனிப்படை போலீஸார், இது வடமாநில கொள்ளையர்கள் என்பதை உறுதிப்படுத்தினர்.

விமான நிலையத்தில் கைது

அதனால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றிலும் போலீஸார் கண்காணித்தனர். இந்தச் சமயத்தில் செயின் பறிப்பு கொள்ளையர்கள், சென்னை விமான நிலையம் நோக்கி செல்லும் சி.சி.டி.வி காட்சி தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக விமான நிலைய இன்ஸ்பெக்டர் பாண்டிக்கு செல்போனில் தகவல் தெரிவித்த தனிப்படை போலீஸார், விமான நிலையத்தில் கடைசி நேரத்தில் போர்டிங் பாஸ் வாங்கியவர்களின் விவரங்களைச் சேகரிக்கக் கூறினர்.

மேலும் சி.சி.டி.வி-யில் பதிவான கொள்ளையர்களின் போட்டோஸ்களையும் இன்ஸ்பெக்டர் பாண்டிக்கு தனிப்படை போலீஸார் அனுப்பி வைத்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையிலான போலீஸ் டீம் விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி-க்களை ஆய்வு செய்தபோது உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஜாபர் குலாம், உசேன் இரானி என்பவரும் மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த மீசாமும், துஷ்வாசம் மேசம் இரானி என்பவரும் அவசர அவசரமாக விமான நிலையத்துக்குள் வருவதும் அங்கு போர்டிங் பாஸ் வாங்கிய தகவலும் தெரிந்தது.

இதில் ஜாபரை விமான நிலைய பகுதியிலேயே போலீஸார் மடக்கிப் பிடித்தனர். மற்றொரு கொள்ளையனான மீசாமும், ஐதராபாத் செல்லும் விமானத்தில் ஏறியிருந்தார். உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கும் அங்கு பாதுகாப்பு பணியிலிருக்கும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்த இன்ஸ்பெக்டர் பாண்டி, அவரை விமானத்திலிருந்து கீழே இறக்கி அழைத்து வந்தார். அதற்குள் இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீஸ் டீம், விமான நிலையத்து வர, இரண்டு கொள்ளையர்களும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜாஃபர்

நகையுடன் ரயிலில்...

இரண்டு கொள்ளையர்களிடம் விசாரித்தபோது செயின் பறிப்பில் கிடைத்த தங்க நகைகளோடு இன்னொரு கொள்ளையன் சல்மான், ரயில் மூலம் செல்லும் தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீஸார், ஆந்திர மாநிலம் ஓங்கோல் ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரின் உதவியால் பிடித்தனர். அவரை சென்னைக்கு தனிப்படை போலீஸார் அழைத்து வருகின்றனர். இதற்கிடையில் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய பைக்கை, தரமணி ரயில் நிலைய பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக ஜாபர் தெரிவித்தார்.

சிசிடிவி

அவரை 26-ம் தேதி அதிகாலையில் போலீஸார் அழைத்துச் சென்றபோது பைக்கில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த ஜாபர், போலீஸாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். உடனே திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, கொள்ளையன் ஜாபரை சரண் அடையும்படி எச்சரித்தார். ஆனால் ஜாபர், போலீஸார் நோக்கி சுட்டதால் பாதுகாப்புக்காக இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, கொள்ளையன் ஜாபரை துப்பாக்கியால் சுட்டார். அவரின் மார்பு பகுதியில் குண்டு துளைத்து சம்பவ இடத்திலேயே ஜாபர் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீஸார், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இரானி கொள்ளையன் ஜாபர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவத்தைக் கேள்விபட்ட மற்ற கொள்ளையர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதைத் தொடர்ந்து தங்களின் கொள்ளை திட்டம் குறித்து விரிவாக தனிப்படை போலீஸாரிடம் தெரிவித்தனர். அதோடு 27 சவரன் தங்க நகைகளையும் தனிப்படை போலீஸார் இரானி கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள்கைது செய்யப்பட்டவர்கள்

என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த போலீஸ் கமிஷனர் அருண், ``இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஈரானி கொள்ளையர்களில் இருவர் விமானம் மூலம் கடந்த 25-ம் தேதி சென்னை வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பைக், ஹெல்மெட்டை இன்னொரு கொள்ளையன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். விமான நிலையத்திலிருந்து பைக்கில் புறப்பட்ட கொள்ளையர்கள், காலை 6 மணிக்கே சைதாப்பேட்டையில் தங்களின் முதல் செயின் பறிப்பு சம்பவத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

அதன்பிறகு அடுத்தடுத்து செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு கிண்டியில் இறுதியாக ஒரு பெண்ணிடம் செயினைப் பறித்திருக்கிறார்கள். பின்னர் திட்டமிட்டபடி தனித்தனி விமான நிலையத்தில் மும்பை, ஐதராபாத்துக்குச் செல்ல விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள். அங்கு மூன்றாவது கொள்ளையனும் வந்திருக்கிறார். மூன்று பேரும் கொள்ளையடித்த தங்க நகைகளைப் பங்கு போட்டு பிரித்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

முதல் செயின் பறிப்பு சம்பவம் நடந்ததும் தனிப்படைகள் அமைத்து அவர்களைத் தீவிரமாக தேட தொடங்கினோம். அதனால்தான் விமான நிலையத்துக்குள் வைத்து ஜாபர், மீசாமும் ஆகிய இரண்டு கொள்ளையர்களைப் பிடித்துவிட்டோம். ரயிலில் தப்பிச் சென்ற சல்மானையும் கைது செய்துள்ளோம்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )