மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தது மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: முதல்வர் ஸ்டாலின்
மதுரை
மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை காணொளியாக
மக்களின் போராட்டம், பேரவை தீர்மானத்துக்குப் பணிந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மக்கள் போராடினர். மேலும், திட்டத்தைக் கைவிடக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, முதல்வரை சந்தித்த டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர், நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்குமாறு முதல்வருக்கு அழைப்பு விடுத்தனர்.
இதை ஏற்று மதுரை வந்த முதல்வர், அரிட்டாபட்டி, அ.வள்ளாலபட்டி கிராமங்களில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது: டங்ஸ்டன் திட்டப் போராட்டத்தில் 3 மாதங்களில் வெற்றி கிடைத்துள்ளது. மக்களும், தமிழக அரசும் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசுக்கு 2 முறை கடிதம் எழுதினேன். அதை அரசியல் காரணங்களுக்காக சிலர் மறைக்கப் பார்க்கின்றனர். இது தொடர்பாக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சிலர் குறுக்குச்சால் ஓட்ட நினைத்தனர். நான் இதை அரசியல் பிரச்சினையாகக் கருதவில்லை. நான் இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது என்று உறுதிபடத் தெரிவத்தேன்.
சட்டப்பேரவைத் தீர்மானம், மக்களின் போராட்டம் காரணமாக இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. பேரவையில் தீர்மானத்தை ஆதரித்த அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில், மக்களுக்குத்தான் நன்றியும், பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதுதான் உண்மை. நாங்கள் எப்போதும் மக்களுக்குத் துணை நிற்போம் என உறுதியளிக்கிறேன் எனவும் முதலமைச்சர் கூறினார்.
முதல்வர் மதுரை மக்கயிடையே பேசிய முழு காணொளியை பார்க்க