பாம்பு பிடி வீரர்களை அங்கீகரித்து, பயிற்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எஸ் டி பி ஐ கட்சி.!

கோயம்புத்தூர்

பாம்பு பிடி வீரர்களை அங்கீகரித்து, பயிற்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எஸ் டி பி ஐ கட்சி.!

பாம்பு பிடி வீரர்களை அங்கீகரித்து, பயிற்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஷபீக் அஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கோவை மாவட்டத்தில், பாம்பு பிடி வீரரான கே. சந்தோஷ் குமார் என்பவர், கடந்த மார்ச் 19, 2025 அன்று நாகப்பாம்பு கடியால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாம்புகளை மீட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து வந்த இவர், சூழலியல் பாதுகாப்பிற்காகத் தன்னை அர்ப்பணித்தவர். ஆனால், ஒரு சிறிய கவனக் குறைவால் பாம்பு கடித்து உயிரிழந்தது,

இப்பணியை மேற்கொள்ளும் நபர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலையைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. பாம்புகளைக் கையாள்வதில் திறமை வாய்ந்தவராக இருந்த போதிலும், இத்தகைய துயரம் நிகழ்ந்திருப்பது சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குமாருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்று திருப்பூர், தென்காசி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாம்பு பிடி வீரர்கள் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இத்தகைய துயரங்களைத்  தடுக்க, தமிழக அரசு உடனடியாக தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாம்பு பிடி வீரர்கள், சூழலியல் சமநிலையைப் பேணுவதற்காகவும், குடியிருப்புகளில் பொதுமக்களை பாம்பு தொல்லைகளிலிருந்து காப்பதற்காகவும், பெரும்பாலும் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். இவர்களது சேவை, பாம்புகளைப் பிடித்துப் பாதுகாப்பாக வனப்பகுதிகளில் விடுவதன் மூலம் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே ஒரு பாலமாக அமைகிறது. ஆயினும், இவர்கள் தமிழக அரசால் இதுவரை முறையாக அங்கீகரிக்கப்படாத நிலையில், அவர்களுக்கு உரிய முறையான பயிற்சி பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பது கவலை அளிக்கிறது.

ஆகவே, பொதுமக்களின் நலனுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் தங்கள் உயிரைத் துச்சமென பணியாற்றும் பாம்பு பிடி வீரர்களைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். இதற்காக ஒரு விரிவான திட்டத்தை அரசு உருவாக்கிட வேண்டும்.

அதனடிப்படையில், வனத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பாம்பு பிடி வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். பாம்புகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது, விஷப்பாம்புகளை அடையாளம் காண்பது மற்றும் அவசர சிகிச்சை அளிப்பது குறித்து தரமான பயிற்சி திட்டங்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், உயர்தர பாம்பு பிடி கருவிகள், கையுறைகள், பாதுகாப்பு உடைகள் போன்றவை இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ வழங்கப்பட வேண்டும்.  பாம்புக் கடி சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் முன்னுரிமை சிகிச்சை உறுதி செய்யப்பட வேண்டும். இவர்களது சேவையை அங்கீகரிக்கும் வகையில், ஊதியம் அல்லது ஒவ்வொரு பணிக்கும் உரிய சன்மானம் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களைத் தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும். இந்த பணியில் ஈடுபடும் பாம்பு பிடி வீரர்கள் பணியின் போது உயிரிழக்க நேர்ந்தால் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )