தோட்டத்தில் பண்ணை வீடு அமைத்து குத்தாட்டம் போட்ட கும்பல் கைது.!
ஒசூர்

கிருஷ்ணகிரி ஒசூர் அருகே தமிழக எல்லையான கக்கனூர் சோதனைச் சாவடியில் கடந்த 24 ஆம் தேதி கர்நாடக பதிவு எண் கொண்ட கார் ஒன்று நிறுத்தாமல் சென்றது.
போலீசார் தடுத்தும் கார் நிற்காமல் சென்றதால் காரைத் பின்தொடர்ந்து போலீசார் சென்ற போது, அந்த கார் பேரிகை அருகே முதுகுருக்கி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பிற்குள் நுழைந்தது.
காரை பின்தொடர்ந்து சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த தோப்பில், டிஜே பார்ட்டி கோலாகலமாக நடந்தது, வெளி மாநிலத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், அரை குறை ஆடையுடன் போதையில் தள்ளாடியபடி ஆட்டம் போட்டனர்.
போலீசார் வந்தது கூட தெரியாமல் குத்தாட்டம் போட்ட அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை பிடித்து விசாரித்து, சோதனை செய்த போது விலை உயர்ந்த போதை மாத்திரைகள், வெளிநாட்டு மதுபானங்கள், கஞ்சா போதை பொருட்களை இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார், காரில் தப்பி வந்த பெங்களூருவை சேர்ந்த பாலாஜி, கோவையை சேர்ந்த இக்னேஸஸ் லாரன்ஸ் காமிலோ, பீகாரை சேர்ந்த ரஜினிஸ் குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
விவசாயி ஒருவருக்கு சொந்தமான 4 ஏக்கர் தோப்பை ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வீதம் குத்தகைக்கு எடுத்து, பண்ணை வீடு அமைத்து இரவு விருந்து நடத்தியது தெரியவந்துள்ளது.
மேலும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்பவர்களுக்கு இரவு மதுபோதையுடன் நடன நிகழ்ச்சி நடத்தியதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.