தொடரும் பாலியல் குற்றங்களை தடுக்க இதை செய்யலாம்..." - முன்னாள் DGP சைலேந்திரபாபு சொல்லும் ஆலோசனை!
குற்றம்

பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் மணீஸ் புற்றுநோய் மருத்துவ மையம் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பொங்கலின் தன்னம்பிக்கை தமிழ் விழா நேற்று நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தாக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
செய்தியாளர் சந்திப்பில் சைலேந்திர பாபு கூறியதாவது:
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கில் போட சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்க சட்டம். இதனால் பாலியல் குற்றங்கள் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. அதேபோல வெளிநாடுகளில் சில விதமான வரைமுறைகளை பின்பற்றுகின்றனர். அதை நாமும் செய்யலாம்.
உதாரணத்துக்கு நம் நாட்டில் தொடர்ந்து இது போன்ற குற்றங்களை செய்யக்கூடிய குற்றப்பழக்கம் உள்ள சில குற்றவாளிகள் ஆங்காங்கே இருக்கின்றனர். கடந்த காலங்களில் அப்படிப்பட்ட ஒரு சில குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது; சிலர் இறந்தும் விட்டனர். இன்னும் சிலர் வெளியே இன்னும் உள்ளனர்.
வெளிநாடுகளில் இதுபோன்ற பழைய பாலியல் குற்றவாளிகளுக்கு, உடலில் மைக்ரோ சிப் எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பொருத்தி அந்த நபர்களை கண்காணிக்கின்றனர். அதுபோன்ற ஒரு அமைப்பை இங்கும் உருவாக்கலாம். தற்போதுள்ள சட்ட கிரிமினல் ஜஸ்டிஸ் சிஸ்டம், குற்ற நியாய அமைப்புக்குள் உள்ள அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கப்பட வேண்டும். இப்படி செய்வதன்மூலம், இது போன்ற குற்றவாளிகள் எங்கெல்லாம் செல்கிறார்கள், எப்போது செல்கிறார்கள் (பெண்கள் கல்லூரிகள், பள்ளிகள், விடுதிகளுக்கு என எங்கு சென்றாலும்) என்பதை 24மணி நேரமும் காவல்துறை கண்காணிக்க வேண்டும்.
அதிக சுதந்திரத்தை மதிக்கக் கூடிய நாடுகளில் எல்லாம் இது போன்ற நடைமுறைகள் உள்ளது. அது போன்ற வசதி தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட வேண்டும். தமிழக காவல்துறை அதிகாரிகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து இருப்பார்கள். அவர்களை கண்காணித்து குற்றம் செய்வதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கையாக கைது செய்தால் இது போன்ற பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்கும்
தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ள சட்ட மசோதா காவல்துறைக்கு கிடைத்த ஆயுதம். அது காவல் துறையினருக்கு மிகவும் உதவியாக இருக்கும். தமிழக அரசுக்கு நன்றி" என்று தெரிவித்தார்.