அதிமுகவின் அடிமடியில் கைவைக்கும் அமித் ஷா! எடப்பாடி கோபத்துக்கு என்ன காரணம்?
அதிமுக + பா.ஜ.க.
சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் (NDA) தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி அமைப்பு குறித்த உள்ளக விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
குறிப்பாக, கூட்டணியில் மேலும் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து பாஜக காட்டும் ஆர்வம், அதிமுக தலைமையிடம் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கூட்டணி கணக்குகள் தீவிரமடைய தொடங்கி இருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதிமுக கூட்டணியில் வரும் நாட்களில் ஓ.பன்னீர்செல்வமும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவையும் அழைத்து வரவேண்டும் என பாஜக நினைக்கிறது. அதில் தான் தற்போது சிக்கல் இருந்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமு. தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட பல சிறிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்போது அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டாலும், கூட்டணியில் இருந்த சில கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால், மொத்தமாக 191 தொகுதிகளில் அந்த சின்னம் பயன்படுத்தப்பட்டது. பாமக மற்றும் பாஜக மட்டும் தங்களது சொந்த சின்னங்களில் களமிறங்கின. இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, இம்முறை தொகுதி எண்ணிக்கை குறையக்கூடாது என்பதில் அதிமுக தலைமை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
அதிமுக பாஜக கூட்டணி
தற்போதைய கணக்குப்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகக்கு சுமார் 165 முதல் 170 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது. இது கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, அதிமுகவுக்கு 10 முதல் 15 தொகுதிகள் வரை இழப்பு ஏற்படும் சூழலை உருவாக்குகிறது. இந்நிலையில், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமு ,அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளதும், புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதும், அதிமுகவின் கவலைக்கு மேலும் காரணமாகியுள்ளது.
தொகுதி பங்கீடு விவாதம்
இன்னும் சில கட்சிகள் இணைந்தால், தங்களுக்கான தொகுதி எண்ணிக்கை மேலும் குறையும் அபாயம் இருப்பதாக அதிமுக தலைமை கணக்குப் போடுகிறது. இதன் பின்னணியில்தான், கூட்டணி பேச்சுகள் இத்துடன் முடிவடைய வேண்டும்; இனி புதிய கட்சிகளுக்கு இடமில்லை என்ற கருத்தை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பாஜக தலைமையிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. கூட்டணி கதவை மூடிவிட்டு, அடுத்த கட்டமாக தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.
பாஜக கூட்டணி விரிவாக்கம்
ஆனால், பாஜக தலைமையின் பார்வை சற்று வேறுபட்டதாக இருப்பதாக தெரிகிறது. திமுக தலைமையிலான கூட்டணி மிக வலுவாக இருப்பதாகவும், தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் மட்டும் போதுமா என்ற சந்தேகம் இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. அதனால், இன்னும் சில சமூக ஆதரவு கொண்ட கட்சிகள் அல்லது பிராந்திய செல்வாக்கு உள்ள அமைப்புகள் கூட்டணியில் இணைந்தால், தேர்தல் களத்தில் பலம் கூடும் என்ற கணக்கில் பாஜக உள்ளது.
பாஜகவின் திட்டம்
இந்த இருவேறு அணுகுமுறைகளால், "கூட்டணி கதவை மூடலாமா? அல்லது இன்னும் திறந்தே வைக்கலாமா?" என்ற கேள்வி, தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. அதிமுக விரைவாக தொகுதி பங்கீட்டை முடித்து தேர்தல் பணிகளை தொடங்க விரும்பும் நிலையில், பாஜக இன்னும் சில அரசியல் வாய்ப்புகளை பரிசீலித்து, சூழலை கவனித்து காத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
