கிரீஷ்மாவை தண்டிக்க கடவுளின் ஏற்பாடு தான் காரணம்! மரண தண்டனை வழங்கிய நீதிபதி கருத்து.!
இந்தியா

திருவனந்தபுரம்: ஷாரோன் ராஜ் கொலை வழக்கில், கிரீஷ்மா ஆதாரப்பூர்வமாக அம்பலப்பட்டு தூக்கு தண்டனை பெறுவதற்கு "கிளவுட் ஸ்டோரேஜ்" ஒரு முக்கியமான காரணமாக இருந்துள்ளது.
கேரளா - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜுக்கு, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில், அவரது காதலி கிரீஷ்மாவுக்கு, தூக்கு தண்டனை விதித்து, நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டது. ஷரோன் ராஜ் "இன்ச் பை இன்ச்" ஆக கொல்லப்பட்டதாக நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
நெய்யாற்றின்கரை நீதிமன்றம், இந்த வழக்கில் நேரடி சாட்சிகள் யாருமே இல்லாத நிலையிலும், போலீசார் முதன்மையாக சமர்ப்பித்த மருத்துவ மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை பரிசீலித்து, கிரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமா நிர்மலகுமாரன் ஆகியோர் குற்றவாளிகள் என உறுதி செய்து, கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த வழக்கில், நேரடி சாட்சியங்களே இல்லாத சூழலிலும், டிஜிட்டல் ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன, மேலும் கொலையின் பின்னணியில் உள்ள உண்மையை போலீசார் அற்புதமாக கண்டுபிடித்துள்ளனர் என்று கேரள நீதிமன்றம், போலீசாருக்கு தெரிவித்தது.
குற்றவாளி கிரீஷ்மாவுக்கு எதிராகச் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களில் வீடியோக்கள், புகைப்படங்கள், வாட்ஸ்அப் சாட், கால் டேட்டா, அழைப்புகளின் ஆடியோ பதிவுகள், ஜிபிஎஸ் லொக்கேஷன் டேட்டா மற்றும் கூகுள் சர்ச் ஹிஸ்டரி, கூகுள் டிரைவ் கிளவுட் ஸ்டோரேஜ் பேக்கப் ஆகியவை முக்கியமானவை.
கூகுள் டிரைவில் பேக்கப் டேட்டாவை திறப்பது எப்படி, கூகுள் டிரைவில் பேக்-அப் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை எப்படி பார்ப்பது, கூகுள் டிரைவில் வாட்ஸ் அப் மெசேஜ்களை பார்ப்பது எப்படி, வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை திரும்பப் பெறுவது எப்படி என்று கூகுளில் கிரீஷ்மா தேடியதையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டது.
கிரீஷ்மா, கூகுளில் தேடிய இந்த விஷயங்களை எல்லாம், குற்றத்திற்கான ஆதாரங்களை மறைக்க முயற்சி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஷாரோன் ராஜுக்கு விஷம் கலந்து கொடுக்க ஆன்லைனில் தேடியது போலவே, அவரது மரணத்துக்குப் பிறகு தான் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க கிரீஷ்மா பல தந்திரங்களைச் செய்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
"டிஜிட்டல் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் உதவியுடன் இந்த விவகாரத்தில் போலீசார் சிறப்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மொபைல் போன் அழைப்புகள், வாட்ஸ் அப் செய்திகள், வீடியோ அழைப்புகள், சிசிடிவி காட்சிகள், பென் டிரைவ்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள், சிடிக்கள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் உதவியுடன் உண்மையைக் கொண்டு வருவதில் காவல்துறை வெற்றி பெற்றுள்ளது" என்று நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நெய்யாற்றின்கரை நீதிமன்ற நீதிபதி பஷீர் தீர்ப்பை வாசித்து முடிக்கும்போது, "கிளவுடில் (Cloud Storage) உள்ள கடவுள் குற்றத்தின் தரவுகளை காப்பாற்றினார். டாக்டர் எட்மண்ட் லோகார்ட் கோட்பாட்டின் அடிப்படையில், குற்றம் நடந்த இடத்தை விட்டு ஒரு தடயமும் இல்லாமல் ஒரு குற்றவாளி வெளியேற முடியாது. அதை மெய்ப்பிக்கும் வகையில், இந்த வழக்கில் குற்றவாளி ஏராளமான ஆதாரங்களை கிளவுடில் விட்டுவிட்டார்." எனத் தெரிவித்தார்.