வன்னியர் சங்க மாநாட்டில் பா.ம.க.நிறுவன் இராமதாஸ் பரபரப்பு பேச்சு.!

அரசியல்

வன்னியர் சங்க மாநாட்டில் பா.ம.க.நிறுவன் இராமதாஸ் பரபரப்பு  பேச்சு.!

வன்னியர் சங்க மாநாட்டில் மருத்துவர் இராமதாஸ் உரையாற்றினார். அவர் கடும் கோபத்துடன் தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளை கடுமையாக சாடினார்.

அவர் பேசியதாவது

உழைக்கத் தயார்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தம்பி உங்களை விட்டு யாரு இருக்கிறார்கள்? என்று கேட்டேன். நீங்கள் அனைவரும் மனது வைத்தால் ஒரு தொகுதியில் 2 ஆயிரம் இளைஞர்கள், இளம்பெண்கள். 50 தொகுதிகளில் சாதாரணமாக நாம் வெற்றி பெற முடியும். அது சாதாரண ஃபார்முலா. ஆனால், எனக்குத் தெரியும் பல பேர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். உழைப்பதில்லை. உழைக்காமல் வேறு எதையோ செய்து கொண்டிருக்கிறீர்கள்.

என் உழைப்பால், என் சிந்தையால் 95 ஆயிரம் கிராமங்களுக்கு என் பாதம் பட்டு இன்றும் நான் உறுதியாக திடமாக இருக்கிறேன். அவ்வளவு பலமாக இருக்கிறேன். உங்களுக்கு உழைக்க நான் தயாராக இருக்கிறேன். உங்களிடம் கேட்பது எல்லாம் ஒரே ஒரு ஓட்டு. ஆட்சி பீடத்தில் உட்காரலாம். நாம் எல்லாருக்கும் கொடுக்கலாம்.

வெட்கமாக இல்லையா?

இந்தியாவிலே காலையிலே தூக்கத்திலே எழுந்தவுடன் உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைக்கிற ஒரே ஒரு மனிதன் ராமதாஸ் மட்டுமே ஆகும். இவ்வளவு நாள் என் பேச்சை மறந்தீர்கள்? யானைச் சின்னத்தில் தனியாக நின்று 4 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இது நமக்கு வெட்கமாக, அசிங்கமாக இல்லையா? கோபம் வரவில்லையா?

கணக்கை முடித்துவிடுவேன்:

நம்ம ஆளு நமக்கே ஓட்டு போடவில்லை. இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்கள் ஒவ்வொருவரின் கணக்கையும் முடித்துவிடுவேன். அதற்கு அர்த்தம் என்னவென்றால் உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. நல்ல பையனை, குடிக்காத பையனை நீதான் மாவட்டம், எல்லாம்னு சொல்லுவேன். எம்.எல்.ஏ. என்றெல்லாம் பார்க்க மாட்டேன். தூக்கி கடலில் வீசிடுவேன்.

கூட்டணி முடிவு:

உங்கள் கணக்கு பார்க்கப்படுகிறது. உங்களைப் பற்றிய கணக்கு எடுக்கப்படுகிறது. ஏமாத்திவிட்டு கோட்டைக்கு போவேன் என்றால் எங்கே கோட்டைக்கு போவது? உங்களை நம்பி தேர்தலில் இறங்கினால் அவ்வளவுதான். கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கிறேன். நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.

உனக்கு சீட் கிடைக்க வேண்டும், எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்றால் நீ நாளை முதலே உழை. உன் உழைப்பு கணக்கெடுக்கப்படுகிறது. இந்த கணக்கில் இருந்து தப்பிக்க முடியாது. காக்கா பிடித்தால் ஒன்றும் நடக்காது. ஆனா உனக்கு ஒன்னும் கிடைக்காது. இனிமேல் உழைக்க வேண்டும். என் தொகுதியை தக்க வைத்துக்கொள்வேன், இதை மனதிலே வைத்துக்கொண்டு நீங்கள் செல்லுங்கள். இந்த சமுதாயம் வாழ 50 ஆண்டுகாலம் போராடுயிருக்கேன். இனியும் போராடுவேன்.

ஏமாற்ற முடியாது:

இந்த ஊமை ஜனங்களுக்கு கோல் ஊன்றியாவது பாடுபட்டு உயிர் விடுவேன் என்று முழக்கமிட்டேன். அந்த கூட்டணி, இந்த கூட்டணி, கட்சிக்குள்ளே கூட்டணி இதெல்லாம் நடக்காது தம்பி, இதெல்லாம் நடக்காது கண்ணு. என் கட்சியிலே பொறுப்புல இருக்கவே முடியாது. அது யாராக இருந்தாலும் சொல்கிறேன். உங்களுடைய நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. உங்களை மாற்றுவதற்கு ஒருவன் வருவான். இந்த ராமதாஸ் நியமிப்பான். இனி எதுவும் நடக்காது. ஏமாற்ற முடியாது பொறுப்பாளர்களே.

உழையுங்கள்:

எனக்கு அடுத்த மாசம் போனா 87 வயசாகிறது. கிழவன் வயசானவன் என்று ஏமாற்றப் பார்க்காதீங்க. எனது பலத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் எனது கையைப் பிடித்துப் பாரு. இந்த கட்சி தனி மனிதனின் சொத்து அல்ல. என்னுடைய உழைப்பால் 40, 50 ஆண்டுகள் உழைத்ததால் கிடைத்தது.

நாம் ஆள வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். கோட்டையில் நின்று கத்தினால் நாம் ஆளுவோமா?

நான் சொன்னதை கேட்டு கட்சிக்காக உழையுங்கள்.உழைக்க முடியாதவர்களுக்கு பதிலாக நான் வேறு ஒருவரை நியமிக்கிறேன் என மாநாட்டில் நிறுவனர் இராமதாஸ் பேசியிருப்பது கட்சியினரிடையே பரப்பையும், உற்சாகத்தையும் எழுப்பியுள்ளது.