உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஆட்டம் போடும் ஆளுநர்.! கோபத்தில் பாஜக,அதிமுக.!

சென்னை

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஆட்டம் போடும் ஆளுநர்.! கோபத்தில் பாஜக,அதிமுக.!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பானது சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் மற்றும் ஜனாதிபதி குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் தர வேண்டும் என கால வரையறை நிர்ணயம் செய்தது. அத்துடன் ஆளுநர் ரவி ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதலும் அளித்தது.

ஒப்புதல் தந்த உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த 10 மசோதாக்களில் ஒன்று, பல்கலைக் கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கப்பட்டு; முதல்வரே வேந்தராக பதவி வகிக்கும் மசோதாவும் ஒன்று. தற்போது இது சட்டமாகிவிட்டது. இதனடிப்படையில்தான் முதல்வரும் வேந்தருமான மு.க.ஸ்டாலின், துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தி இருந்தார்.

போட்டி மாநாடு கூட்டிய ஆளுநர் ரவி

இதற்கு போட்டியாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் துணைவேந்தர்கள் மாநாட்டைக் கூட்டியது பெரும் சர்ச்சையானது. இந்த மாநாட்டை ஒட்டுமொத்தமாக துணைவேந்தர்கள் புறக்கணிக்கவும் செய்துவிட்டனர்.

ஆளுநர் ரவியின் அரசியல் விமர்சனம்

இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் ரவி, ஒரு அரசியல்வாதியைப் போல

தமிழ்நாடு அரசை மிக கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக ராஜ்பவனின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஆளுநர் ரவி , மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் காவல்துறையைப் பயன்படுத்தி, இன்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது. மாநில உயர்கல்வி அமைச்சர், துணை வேந்தர்களிடம் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது பலனளிக்காத நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார்.

உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாம் ஸ்டாலின் காவல்துறை

மாநாட்டு நாளில் ஒரு துணைவேந்தர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஊட்டியை அடைந்த மற்றவர்கள் தங்கிய விடுதிகளின் அறை கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்றால் உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என்றும், மாநாட்டில் கலந்து கொண்டால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது காவல்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம் ஆகும்!

இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? அல்லது தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் மாநில பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதன் விளைவுகள், எந்தவொரு தர மேம்பாடும் மாணவர்களை ஆர்வமுள்ளவர்களாகவும் ஊக்கமளிப்பவர்களாகவும் மாற்றும் என்பதால் இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா? என ஒரு அரசியல்வாதியாக பதிவிட்டிருந்தது மிகப் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

ஆளுநர் ரவிக்கு அமைச்சர் கோவி செழியன் பதிலடி

ஆளுநர் ரவியின் இந்த அரசியல் விளையாட்டை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் கடுமையாக விமர்சித்து பதிலடி தந்திருந்தார். துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்'' எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். இதற்கு முன்பு ஆளுநர் ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற துணை வேந்தர்கள் இப்போது ஏன் பங்கேற்கவில்லை? இந்தக் கேள்விக்குப் பட்டம் படித்து மேதாவியாக இருக்க வேண்டியதில்லை.

உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததால், அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்குக் காலக்கெடு நிர்ணயித்த நீதிபதிகள், ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தனர்.

துணைவேந்தர்கள் புறக்கணிப்பு

இந்தத் தீர்ப்புக்கு பிறகுதான் தமிழ்நாடு அரசோடு மல்லுக்கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஆளுநர் ரவி துணை வேந்தர்கள் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டைத் துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இதற்கு எப்படி மாநில அரசு பொறுப்பாகும்? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் சட்டமும் துணை வேந்தர்களுக்குத் தெரிகிறது. ஆனால், எல்லாம் தெரிந்தும் ஆளுநர்தான் வீம்புக்கு அரசியல் செய்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சட்டத்துக்குப் புறம்பாகத் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டியிருக்கிறார். அதில் பங்கேற்பது சட்டத்திற்கு எதிராக அமையும் எனக் கருதி, துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஆளுநர் ரவிதான் சட்டத்தை மதிக்காமல் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள் என்றால், துணை வேந்தர்களும் அப்படியே நடக்க வேண்டுமா என்ன?

தமிழக பாஜக தலைவராகி இருக்கலாமே

அண்மையில் கூட தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவிக்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். அரசியல் செய்ய ஆசைப்பட்டால், ஆளுநர் ரவி அந்தப் பதவியில் போய் அமர்ந்திருக்கலாமே! எதற்கு ஊட்டிக்குப் போனார்?

மிரட்டுவது பாஜக அரசுதானே

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித் துறை, என்.ஐ.ஏ. போன்ற அதிகார அமைப்புகளை வைத்துத்தான் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு எதையும் சட்ட ரீதியாகத்தான் எதிர்கொள்வோம். அப்படித்தான் மசோதாக்கள் விவகாரத்தில் வெற்றி பெற்றோம்.

அரசியல் சாசனத்திலேயே இல்லையே

ஆளுநர்கள் அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தராகச் செயல்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர்கள் இருப்பதைப் பற்றி அரசமைப்புச் சட்டத்தில் எதுவும் சொல்லவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தாங்க முடியலையாம்..

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை எல்லாம் பல மாதங்களாகக் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கும் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், குடியரசுத் துணை தலைவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு வந்திருக்கிறார் ஆளுநர் ரவி.

வயிறு எரிந்த ஜெகதீப் தன்கர்

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு போட்ட வழக்கு ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே! என அடிவயிறு எரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு வைத்த மசோதாக்களால்தான் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பை விமர்சிக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர். இவர் மேற்கு வங்க ஆளுநராக இருந்த போது முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக நடத்திய அடாவடிகளை இந்த நாடு பார்த்தது. அவர் வழியொற்றி நடக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

அரசியல்வாதிகளை ஆளுநராக்க எதிர்ப்பு தெரிவித்த மோடி

"மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி மதன் மோகன் பூஞ்சி கமிஷன் அறிக்கையின் படி, அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது. ஆனால், மன்மோகன் சிங் அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல; மாற்றுக் கருத்துகளைக் கொண்ட அரசியல்வாதிகளையும் ஆளுநராக நியமிக்கிறது" எனச் சொன்னவர் யார் தெரியுமா? குஜராத் முதல்வராக இருந்த மோடிதான்!

தமிழ்நாட்டில் ஆளுநர்கள் செய்தது இதுதான்...

மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க.வுக்குப் பிடிக்காத, அவர்களை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம்தான் குடைச்சலைக் கொடுத்து கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது. பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகளைத்தான் ஆளுநர்களாக மோடி நியமித்தார். மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்தபோதுதான் சசிகலாவை முதலமைச்சர் பதவி ஏற்கவிடாமல் எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் ஒன்றாகக் கைகோர்த்து இணைத்து வைத்தார். பன்வாரிலால் புரோகித்தையும் ஆர்.என்.ரவியையும் ஆளுநர்களாக நியமித்து தமிழக அரசுக்குக் குடைச்சலைக் கொடுத்தார்கள். மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில்தான் ஊறிக் கிடக்கிறது. மிரட்டுவது உங்கள் டி.என்.ஏவில் இருக்கலாம்; துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டி.என்.ஏவில் இருக்கிறது விமர்சித்திருந்தார்.

ஆளுநர் ரவியால் புலம்பும் பாஜக- அதிமுக

உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவாகவே ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சித்து செயல்படுவதே சட்டவிரோதம்; அரசியல் சாசனத்துக்கு எதிரானது என வெளுத்து விட்டிருந்தது. இதைப் பற்றி எல்லாம் கிஞ்சித்தும் கவலைபடாமல் மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ரவி தொடர்ந்து மோதி வருகிறார். இதனால் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணியான பாஜக ஆகியவையும் கூட ஆளுநர் ரவி மீது கடுமையான அதிருப்தியில் இருக்கினாறனவாம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரும் ஆளுநர் ரவி இப்படி திமுகவுடன் மோதுவது அரசியல் ரீதியாக அதிமுக, பாஜகவுக்கு பின்னடைவுதான் என்கின்றனர் அக்கட்சியின் தலைவர்கள்.