செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு மதிக்கவில்லை! நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி ஓகா

தமிழகம்

செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு மதிக்கவில்லை! நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி ஓகா

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் கடும் கண்டனத்தையும் நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர்.

வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வழங்கியதில் முழு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படவிலஸ்லை என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கியதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில், பாலாஜி சீனிவாசன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி அபய் ஓகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கில் மாநில அரசு என்ன சொல்ல வருகிறது.

கடந்த முறை பதில் சொல்கிறோம் என கூறியதால்தான் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. ஆனால் தற்போது வரை தமிழக அரசு பதில் தரவில்லை. நோட்டீஸ் வேண்டாம் என மாநில அரசின் உத்தரவாதம் அடிப்படையில் உத்தரவை மாற்றினோம்.

நீதிமன்றத்தின் முடிவை தமிழக அரசு மதிக்கவில்லை என்பதால் நோட்டீஸ் அனுப்புகிறோம். செந்தில் பாலாஜி வழக்கில் நிவாரணம் வழங்குவதா இல்லையா என்பது தனி விஷயம். இந்த பண மோசடியில் எத்தனை சாட்சிகள் உள்ளனர் என்ற விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் உள்துறை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் பிறப்பித்து பதில் தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஏற்கெனவே செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்த போது நீதிபதி ஓகா, "பிணை வழங்கியதற்கு அடுத்த நாளே செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் மீண்டும் இணைத்தது ஏற்க முடியவில்லை எனவும் அமைச்சரானதால் அவருக்கு எதிரான சாட்சியங்கள் அஞ்சுவர் என நீதிபதி காட்டமாக கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.