அண்ணாமலையை அண்ணாந்து பார்க்கும் பாஜக மேலிடம். ! எதிர்பாராத ட்விஸ்ட்.!
அண்ணாமலை Vs பாஜக
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும், முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும் "கோல்டு வார்" வலுப்பெறுவதாக செய்திகள் பரபரத்து வரும் நிலையில், தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில், நிலைமை கட்சிக்குள் தலைகீழாக மாறி வருகிறதாம்.
அந்தவகையில் 2 விதமான செய்திகள் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன
2024 மக்களவை தேர்தலின்போது, பாஜக தலைமையில் தமிழகத்தில் கூட்டணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டார் அண்ணாமலை.. எங்குமே வெற்றியை தரவில்லை என்றாலும், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை கணிசமாக உயர்த்தியதில் அண்ணாமலைக்கு பெரும் பங்கு உள்ளதை மறுக்க முடியாது.
தனி கட்சி எப்போது?
அதாவது NDA கூட்டணி 18% வாக்குவங்கியை பெற்றிருந்தது என்றால், இதில், பாஜக மட்டுமே 11 % வாக்குகளாகும்.. அந்தளவுக்கு தமிழகத்தில் பாஜக மெல்ல வளர துவங்கியது. ஆனால், திடீரென அண்ணாமலையின் தலைவர் பதவி மாற்றப்பட்டது.. இதனால் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு, அப்படி எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில்தான், பாஜகவுக்குள்ளேயே புகைச்சல் கிளம்பியது..அண்ணாமலைக்கு தனி கூட்டம் இருப்பதாக பாஜகவுக்குள் சலசலக்கப்பட்டது..
வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் போன்ற தலைவர்களும் இதனை மேலிடத்துக்கு கொண்டு சென்றதாக தெரிகிறது.. மற்றொருபக்கம் அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி துவங்க போகிறார் என்றும் செய்திகள் கசிந்தன..ஒருவேளை அண்ணாமலை புதிய கட்சி துவங்கினால் யார் யாருடன் கூட்டணி வைப்பார் என்றுகூட சோஷியல் மீடியாவில் விவாதங்கள் வெடித்தன.
எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலையை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த அதேசமயம், டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் நெருக்கமான உறவையே வைத்துள்ளார். எனவே அமமுக மட்டுமல்லாமல் ஓபிஎஸ், செங்கோட்டையன் உள்ளிட்டோரும்கூட அண்ணாமலை கட்சி ஆரம்பித்தால் அவருடன் இணைந்து பயணிக்கலாம் என்ற பேச்சு ஓடியது.
இப்போது செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்துவிட்டதால், ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரும் தவெக பக்கம் எந்த வகையில் நகருவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோடிக்கணக்கில் பணம்
இப்படிப்பட்ட சூழலில் அண்ணாமலை குறித்த 2 விதமான செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.. அதாவது கோடிக்கணக்கான முதலீட்டில் பெங்களூரில் அண்ணாமலை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், இதற்கான பணம் எப்படி வந்தது? என்றும் மேலிடத்தில் சிலர் புகார் தந்துள்ளார்களாம்.
எனவே இதுகுறித்த விசாரணை விரிவடையும் பட்சத்தில் பாஜகவிலிருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என்கிறார்கள். அல்லது அதிருப்திகள் வெடித்து அண்ணாமலையை கட்சியிலிருந்து வெளிவரக்கூடும் என்கிறார்கள்.
ரகசிய ரிப்போர்ட்
அப்படி பாஜகவிலிருந்து வெளியேறினால், ஏற்கனவே முடிவு செய்தபடி, தன்னுடைய ஆதரவாளர்களை இணைத்து, புது கட்சியை துவங்கி, டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலாவுடன் சேர்ந்து தவெகவில் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது என்றும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளாராம்,
எப்படியும் டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் தன்னுடைய கட்சியை தொடங்கப் போவதாக கூறுகிறார்கள்..!
அண்ணாமலை பற்றின ரிப்போர்ட்
மற்றொருபக்கம் அண்ணாமலையை பாஜக எக்காரணம் கொண்டும் கைவிடாது என்கிறார்கள்.. காரணம், டெல்லி தலைமைக்கு ஒரு முக்கிய ரகசிய ரிப்போர்ட் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாம்..
அதில், அண்ணாமலை தலைமை பொறுப்பில் இருந்தபோது தமிழகத்தில் கட்சி வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்தது, இளைஞர்கள் அதிகமானோர் தமிழக பாஜகவில் அண்ணாமலை முன்பு இணைந்தனர், களப்பணியில் வீரியமாக செயல்பட்டனர், எனவே அண்ணாமலையின் அவசியம் தவிர்க்க முடியாதது" என்றெல்லாம் ரிப்போர்ட் போனதாம்.
இதையடுத்து, தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அண்ணாமலையின் பங்கு தமிழகத்தில் தேவையாக இருக்கும் என்பதால், அண்ணாமலைக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கலாமா? என்ற ஆலோசனையிலும் மத்திய பாஜக இறங்கியிருக்கிறதாம்..
மொத்தத்தில் தமிழக பாஜகவில் அண்ணாமலை தவிர்க்க முடியாத அரசியல்வாதியாகிவிட்டதால், அவரை அவ்வளவு லேசில் பாஜக விட்டுவிடாது என்பதையே அரசியல் விமர்சகர்கள் பெரும்பாலானோர் தங்கள் கருத்துக்களாக முன்வைக்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்.
