பத்திரப் பதிவு அலுவலகங்களில் ரூ 20 ஆயிரத்துக்கு மேல் பரிமாற்றம் நடந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். ! புதிய ஆணை. !

பத்திரப்பதிவு துறை

பத்திரப் பதிவு அலுவலகங்களில் ரூ 20 ஆயிரத்துக்கு மேல் பரிமாற்றம் நடந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். ! புதிய ஆணை. !

பத்திரப்பதிவு, பிறப்புச்சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பதிவு, மற்றும் சங்கங்கள் பதிவு போன்ற பணிகள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் என அனைத்து விதமான நில விவகாரங்கள், சொத்து விவகாரங்களுக்கு, சார் பதிவாளர் அலுவலகம்தான் செல்ல வேண்டியிருக்கிறது..

சார் பதிவாளர் அலுவலகங்கள் அனைத்துமே பதிவுத்துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.. தமிழகத்திலுள்ள 585 இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.. சொத்து விற்பனை மட்டுமல்லாது, திருமணப் பதிவு, சங்கங்கள், நிறுவனங்கள் பதிவு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணமும் இந்த அலுவலகங்களில்தான் பதிவாகின்றன..

இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் 20,000க்கு மேல் ரொக்க பரிமாற்றம் நடந்தால் அதுகுறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

காரணம், வீடு, மனை விற்பனை உள்ளிட்ட நிகழ்வுகளில் பணப் பரிமாற்றம் அதிகமாக உள்ளது. இதில் கருப்பு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த, வருமான வரித்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சொத்து பரிமாற்றத்தின்போது, அதற்கான விலையாக கொடுக்கப்படும் தொகையில், 20,000 ரூபாய்க்கு மேல், ரொக்கம் அனுமதிக்க கூடாது என்ற விதிமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.. ஆனாலும், பல்வேறு இடங்களில் பத்திரங்களில் அதிக தொகை ரொக்கமாக பெறப்பட்டதாக குறிப்பிடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவேதான், சொத்து விற்பனை பத்திரங்களில், ரொக்க பரிமாற்றம் கூடாது என்றும் அப்படி ஏதாவது நடந்தால், உடனடியாக தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தரவில், "சொத்து விற்பனை பத்திரங்களில், ரொக்க பரிமாற்றம் கூடாது. அவ்வாறு வந்தால், தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என, வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்த பதிவுத் துறைக்கு, உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

எனவே, அனைத்து சார் - பதிவாளர்களும், இது விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும். பதிவுக்கு தாக்கலாகும் பத்திரத்தில், 20,000 ரூபாய்க்கு மேல், ரொக்க பரிமாற்றம் இல்லாததை, உறுதி செய்ய வேண்டும். இது விஷயத்தில் கவனக்குறைவாக செயல்படும், சார் - பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.