181 பேருடன் பயணித்த விமானம் 179 பேரை பலி கொண்டது எப்படி.?
உலகம்
தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 179 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் போயிங் 737-800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்குவதற்கு முன்பாக விமானத்திற்கு என்ன நடந்தது? உள்ளே இருந்த பயணி ஒருவர் தனது உறவினருக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தியில் பகிர்ந்த முக்கிய தகவல் என்ன?
இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
விமானத்தின் பின்புறத்தில் இருந்த பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பறவை மோதல் அல்லது மோசமான வானிலை, இந்த விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை ஊகிக்கிறது.
பயணியின் குறுஞ்செய்தி
விமானம் விபத்தில் சிக்குவதற்கு சற்று முன்பாக, அதில் இருந்த பயணி ஒருவர் தனது குடும்ப உறுப்பினருக்கு செல்போனில் அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த குறுஞ்செய்தியில், விமானத்தில் இறக்கையில் ஒரு பறவை மோதியதாக அந்த பயணி குறிப்பிட்டிருந்தார் என்கிறது அந்த செய்தி. அத்துடன், "எனது கடைசி வார்த்தைகளை அனுப்ப வேண்டுமா?" என்றும் குறுந்தகவலில் அந்த பயணி கூறியிருந்ததாக உள்ளூர் ஊடகம் கூறுகிறது.
அதன் பிறகு, விமானத்தில் இருந்த அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற உறவினர் தெரிவித்துள்ளார்.