9 - 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு டிச.31க்குள் இமெயில் ஐடி உருவாக்கி தர உத்தரவு: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

9 - 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு டிச.31க்குள் இமெயில் ஐடி உருவாக்கி தர உத்தரவு: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

9 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 31ம் தேதிக்குள் இமெயில் ஐடி உருவாக்கி தர அனைத்து பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளியிலும் மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அரசு கொண்டு வந்து அதனை திறம்பட செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கும் டிஜிட்டல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. அந்தவகையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு இமெயில் ஐடி உருவாக்கி தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பொறியியல், பாலிடெக்னிக், தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர்நிலை படிப்புகளில் சேரவும், பாடத்திட்ட தகவல், தேர்வுகள், விடுமுறை, சுற்றறிக்கை உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ள இமெயில் ஐடிகளை மாணவர்களுக்கு உருவாக்கி தர அனைத்து பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாணவர்கள் தாங்களாகவே இமெயில் ஐடிகளை உருவாக்க ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதில் மாணவர்களுக்கு இமெயிலை எப்படி பயன்படுத்துவது, அதனை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது போன்ற வழிகாட்டுதல்கள் கற்று கொடுக்கப்படும். இதற்கான பள்ளிகளில் உள்ள ஐடேக் லேப் கணினிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இந்த மாணவர்களின் இமெயில் முகவரிகளை பள்ளிக்கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (EMIS) இணைக்கவும் வேண்டும் என தெரிவித்துள்ளோம். இந்த பணிகளை டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.