196 நிமிடத்தில் வெறும் 1 தான்.. விராட், ரோஹித்துக்கு பாடம் எடுத்த தமிழக வீரர் சுந்தர்.!
Cricket

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா போராடி வருகிறது.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களில் அவுட்டானார். கேஎல் ராகுல் 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் விராட் கோலி மீண்டும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் 36 ரன்னில் நடையை கட்டினார். ரிஷப் பண்ட் 28, ஜடேஜா 17 ரன்களில் அவுட்டானதால் இந்தியா 221-7 என தடுமாறியது.
அப்போது ஜோடி சேர்ந்த நித்திஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள். அதில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நங்கூரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக மிகவும் மெதுவாக விளையாடி ஆஸ்திரேலிய பவுலர்கள் உருவாக்கிய அழுத்தத்தை உடைத்தார். மறுபுறம் அதைப் பயன்படுத்தி சுமாரான பந்துகளில் பந்துகளை அடித்து நித்திஷ் ரெட்டி அரை சதத்தை பதிவு செய்தார்.
நேரம் செல்ல செல்ல வாஷிங்டன் சுந்தர் ஏராளமான அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை அடிக்காமல் விட்டு 2வது புதிய பந்தையும் சமாளித்து விளையாடினார். அதன் பயனாக நித்திஷ் ரெட்டியுடன் சேர்ந்து 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் இந்தியாவை ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றினார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 8வது விக்கெட்டுக்கு இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாகவும் சுந்தர் சாதனை படைத்தார்.
மொத்தத்தில் 196 நிமிடங்கள் களத்தில் நின்ற அவர் வெறும் ஒரே 1 பவுண்டரி மட்டும் அடித்து 162 பந்துகளை எதிர்கொண்டு 30.36 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் குவித்து அவுட்டானார்.
மறுபுறம் சுந்தர் உதவியுடன் அவரைப் போலவே தொடர்ந்து அசத்திய நித்திஷ் ரெட்டி சதமடித்து 105 (176) ரன்களுடன் உள்ளார். இவர்களது ஆட்டத்தால் 3 வது நாள் முடிவில் 358-9 ரன்கள் எடுத்துள்ள இந்தியா போராடினால் வெல்லலாம் என்ற நிலையில் இருக்கிறது.