நடிகர் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

Puspha

நடிகர் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நடிகர் அல்லு அர்ஜூன் இன்று சிக்கடப்பள்ளி காவல்நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளது. 

நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி 'புஷ்பா2' படம் வெளியானது.

படம் வெளியான முதல் நாள் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் படத்தின் ப்ரீமியர் ஷோவைக் காண திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பியது.

அப்போது ரசிகர்களுடன் படம் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் திரையரங்கிற்கு வந்ததால் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகனும் பலத்தகாயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா திரையரங்க உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரேவதியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியுதவியும் அளித்து, நடிகர் அல்லு அர்ஜூன் வருத்தம் தெரிவித்திருந்தார்.

மேலும் தன் மீதுள்ள வழக்கை ரத்து செய்யும் படியும் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் நடிகர் அல்லு அர்ஜூன்.

ஏற்கனவே, திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சிக்கடப்பள்ளி காவல்துறையினரால் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே நேரத்தில், அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தெலுங்கானா உயர் நீதிமன்றம், இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.