கன்னிகா - சினேகன் குழந்தைகளுக்கு பெயர் வைத்த கமல்ஹாசன். !

சினிமா

கன்னிகா - சினேகன் குழந்தைகளுக்கு பெயர் வைத்த கமல்ஹாசன். !

கவிஞர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பெயர் வைத்து, தங்க வளையல் சூட்டியிருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சினேகன் பெரிய அளவில் பிரபலமானார். அதற்கு முன்பு பல திரைப்பட பாடல்களை எழுதி இருக்கிறார். ஆனால் அந்த பாடல்களை எல்லாம் எழுதியது சினேகன் தான் என்பது பலருக்கும் தெரியாது. பலரையும் முணுமுணுக்க வைக்கும் ஹிட் பாடல்கள், பலருடைய மனதில் காதலை உருவாக்கும் காதல் பாடல்கள் என பல பாடல்களை சினேகன் எழுதியிருக்கிறார்.

ஆனாலும் அவர் பிரபலமானது பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சி மூலமாக தான். அதுபோல அந்த நிகழ்ச்சியில் சினேகன் வெற்றி பெறவில்லை என்றாலும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையக் கட்சியின் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். கமல்ஹாசன் மீது அதிகமான அன்பு வைத்திருக்கிறார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் இருக்கும்போது தான் தான் ஒரு பெண்ணை காதலிப்பதை அறிவித்திருந்தார். அது நடிகை கன்னிகா என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

தன்னுடைய காதலை ரகசியமாக வைத்திருந்த சினேகன் கடந்த 2001 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தலைமையில் பிரம்மாண்டமாக கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களாக இந்த தம்பதி குழந்தையை பெற்றுக் கொள்ளாமல் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கன்னிகா கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.

அதற்கு பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் கன்னிகா மற்றும் சினேகன் தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை சினேகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அதில் "இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாறா... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது. தாயே எந்தன் மகளாகவும்... மகளே எந்தன் தாயாகவும் இரு தேவதைகள் பிறந்து இருக்கிறார்கள்" என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மன்றத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை சினேகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இன்று சந்தித்திருக்கின்றனர். அப்போது கமல்ஹாசன் இரு குழந்தைகளுக்கும் தங்க வளையல் அணிவித்து குழந்தைகளுக்கு பெயர் சூட்டி இருக்கிறார்.

அதில் ஒரு குழந்தைக்கு "காதல்" கன்னிகா சினேகன் என்ற பெயரையும், இன்னொரு குழந்தைக்கு "கவிதை" கன்னிகா சினேகன் என்ற பெயரையும் வைத்திருக்கிறார். இது குறித்து சினேகன் மற்றும் கன்னிகா வெளியிட்டபதிவில் "காதலர் தினத்தில் எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையலோடு "காதல் கன்னிகா சினேகன்" என்ற பெயரையும், "கவிதை கன்னிகா சினேகன்" என்ற பெயரையும் அணிவித்து வாழ்த்திய நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள் என்று தெரிவித்திருக்கிறார்.