சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - காவல்துறை முக்கிய எச்சரிக்கை
சென்னை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்த எப்ஐஆர் விவரங்களை சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என சென்னை மாநகர காவல்துறை முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். அவர் திங்கட்கிழமை இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற ஞானசேகரன் காதலனை மிரட்டி அனுப்பிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவி கெஞ்சி கேட்டும் அந்த நபர் இந்த கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்,குற்றம்சாட்டப்பட்டவரை தேட தொடங்கியுள்ளனர்.
24 ஆம் தேதி காலை 10 மணிக்கு காவல் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 24ம் தேதி பெண் காவல் ஆய்வாளர் பத்மா நேரில் சென்று மாணவியை சந்தித்து புகாரை பெற்றுள்ளார். ஞானசேகரனின் குற்றப் பின்னணியை அறிந்து சந்தேகத்தின் பேரில் பிடித்து 24ம் தேதியே போலீசார் விசாரணை செய்துள்ளனர். வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் போது அங்குள்ள பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வது ஞானசேகரனின் வழக்கம். போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் காவல் நிலையம் செல்லும் போது செல்போனில் ஆதாரங்களை அழித்துவிட்டு சென்றுள்ளார் ஞானசேகரன்.
விசாரணையின் போது தான் ஏதும் செய்யவில்லை என மறுத்ததால் எழுதி வாங்கி கொண்டு ஞானசேகரனை போலீசார் அனுப்பியதாக தகவல். CCTV, செல்போன் சிக்னல் ஆடைகள் போன்றவற்றின் மூலம் ஞானசேகரன் மீண்டும் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டான். ஞானசேகரனின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வீடியோக்களை போலீசார் ரெகவரி செய்துள்ளனர். அறிவியல்பூர்வ ஆதாரங்கள் மூலம் ஞானசேகரன் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து மீண்டும் பிடித்துள்ளனர் போலீசார்.
ஞானசேகரன் குடும்ப பின்னணி
ஞானசேகரன் அடையாரில் பிரியாணி கடை வைத்து நடத்துகிறாராம். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் வரை வருமானம் சம்பாதிக்கும் அவர் பகலில் கடையிலும் இரவில் உல்லாச வாழ்க்கையிலும் ஈடுபட்டுள்ளார். காதலர்களை மிரட்டி பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதே இவருடைய கொடூர பாணியாக இருந்திருக்கிறது. இவருக்கு மொத்தம் நான்கு மனைவிகள். முதல் மனைவிக்கு பெண் குழந்தையும் இருக்கிறது. இருப்பினும் மனைவிகளுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததால் அவர்கள் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் நான்காவது மனைவியுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. தினமும் இரவு தன்னுடைய சொகுசு கார் மூலம் சுற்றி பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார் அவர்.
காதலர்களை பார்த்துவிட்டால் அவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்வதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இப்போது வசமாக சிக்கியிருக்கிறார் போலீசாரின் பிடியில்.
சென்னை காவல்துறை எச்சரிக்கை
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் FIR தொடர்பான விவரங்களை ஒளிபரப்பினாலோ, சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலோ நடவடிக்கை பாயும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.