தனது குடும்பத்தார் 5 பேரை கொன்ற கேரள இளைஞர்.! ஒரே ஒரு காரணம் குடும்ப கஷ்டம்.!

கேரளா

தனது குடும்பத்தார் 5 பேரை கொன்ற கேரள இளைஞர்.! ஒரே ஒரு காரணம் குடும்ப கஷ்டம்.!

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி. அதுபோல குடும்பத்தினர் மீது அதீத அன்பு கொண்ட கேரள இளைஞர் அஃபான், பணப் பிரச்னையால், தான் நேசித்த ஒட்டுமொத்த குடும்பத்தையும், தான் வெறுத்தவர்களையும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு கொலைகாரராக நாடு முழுவதும் அஃபான் அறியப்பட்டாலும், அவரது நல்ல குணங்களையும் நடவடிக்கைகளையும்தான் அக்கம் பக்கத்தினர் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால், அஃபான் என்ற அந்த இளைஞர், தன்னை வெறிநாய் போல துரத்திய பண நெருக்கடியால்தான், இந்த கொலைகளைச் செய்திருப்பதாகவும் அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஒட்டுமொத்த குடும்பத்தையும் அஃபான்தான் கவனித்து வந்துள்ளார். அவரது தந்தை, சவூதி அரேபியாவில் சொந்தமாக தொழில் செய்து, அதில் நஷ்டம் ஏற்பட்டதோடு, சில சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறவும் முடியாமல், சொந்தக் குடும்பத்துக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்கவும் முடியாமல் இருந்திருக்கிறார்.

இதனால், கிட்டத்தட்ட ரூ.75 லட்சம் கடனில் அஃபான் சிக்கிக்கொண்டிருக்கிறார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை, கடன்காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது, தந்தைக்கு உதவுவது, தம்பியை வைக்க, புற்றுநோய் பாதித்த தாய்க்கு சிகிச்சைக்கான பணம் என பல இடங்களிலும் அவர் பணத்தைப் புரட்டியிருக்கிறார். தொடர்ந்து கடன் கொடுத்தவர்களின் தொல்லையையும் அனுபவித்து வந்துள்ளார்.

தனது உறவினர்கள் பலரிடமும் அஃபான் கடன் வாங்கியிருக்கிறார். இதனால், உறவினர்கள் பலரும் இவரை பொறுப்பற்றவர், வாங்கிய கடனைக் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். தனித்துவிடப்பட்ட அந்த இளைஞருக்கு எங்கும் உதவி கிடைக்காமல், என்னசெய்வது என்று தெரியாமல், தான் மிகவும் நேசித்தவர்களையும், தான் வெறுத்தவர்களையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்.

அஃபானின் தாய் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது மகன் அஃபசானை பார்க்க வேண்டும் என்று விரும்புவுதாகக் கூறியிருக்கிறார். ஆனால், அவரைத் தொடர்ந்து அவரது மகன் உள்பட குடும்பத்தினர் பெற்ற மகனாலேயே கொல்லப்பட்டுள்ளனர் என்பது எதுவுமே அஃபான் தாய் ஷெமிக்குத் தெரியாது.

கொலை நடந்தது எப்படி?

அஃபான் முதலில், தனது தாய் வீட்டுக்குச் சென்று, அவரை சால்வையால் மூடி, தலையை சுவர் மற்றும் தரையில் இடித்திருக்கிறார். அப்போது மயங்கி விழுந்த தாய் இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டுள்ளார. தனது சொந்த பகுதியான பெருமலாவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பங்கோடு பகுதிக்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த தனது 92 வயது பாட்டியை, கொலை செய்வதற்காக தான் வாங்கிய சுத்தியலால் அடித்துள்ளார். அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பிறகு, நேராக உறவினர் லத்தீஃப் மற்றும் அவரது மனைவி சஜிதாவையும் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு, அன்று மாலை பெருமலா திரும்பியிருக்கிறார்.

பள்ளி முடிந்து அஃப்சான் வீட்டுக்கு வந்து கதவு பூட்டியிருந்ததால் வெளியே காத்திருந்தார். அப்போது அஃபான் தனது காதலி ஃபர்சானாவுடன் வீட்டுக்கு வந்தார். அதுதான் இருவரையும் நாங்கள் கடைசியாக பார்த்தது என்று அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள்.

வீட்டுக்குள் சென்ற மூவரின் அஃப்சானும், ஃபர்சனாவும் இறந்துவிட்டதாக சில மணி நேரத்தில் காவல்துறை சொன்னபோது பலருக்கும் அதிர்ச்சி.

பிறகு அஃபான் ஆட்டோவில் ஏறி காவல்நிலையம் சென்று கொலைகளைச் செய்ததாக சரண் அடைந்துள்ளார். அப்போதும் காவல்துறையினர் அது உண்மை என நம்பவில்லை. அப்போதுதான், அவர் தனது கையில் வைத்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்துவிட்டு சாய்ந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பிய காவல்துறை, அவர் சொன்ன இடங்களில் ஆள்களை அனுப்பித் தேடியபோது, அங்கு 6 பேர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். தாய் மட்டும் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரது வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, தம்பி மற்றும் தாயை காவல்துறையினர் பார்த்தனர். ஆனால், அங்கே மற்றொரு உடலும் இருக்கும் என்று நினைக்கவில்லை. அதுதான் ஃபர்சானா உடல். அவரது தலையும் சிதைக்கப்பட்டிருந்தது.

பிறகுதான், அவரது பாட்டி மற்றும் உறவினர் வீடுகளுக்கும் காவல்துறை சென்று அங்கிருந்த உடல்களை மீட்டனர்.

இந்த கொலைகளுக்குக் காரணம், அஃபான் பல்வேறு சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருந்ததும், அவர் பலரையும் கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருந்ததுமே என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். அவருக்குள் ஏற்பட்ட அழுத்தமே வெடித்து இந்த கொலைகளைச் செய்ய தூண்டியதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் காவல்துறை அதிகாரி இதுபற்றி கூறுகையில், அஃபான் செயலுக்கு சமூக அழுத்தமும் காரணம் என்றும், ஒரேநாளில் இந்த பாதிப்பு ஏற்பட்டுவிடவில்லை என்றும் கூறியிருக்கிறார்.