அமைச்சர்களின் பதவி நீடிக்குமா? அல்லது பறிபோகுமா? பதற்றத்தில் அமைச்சர்கள்.!

சட்டப்பேரவை

அமைச்சர்களின் பதவி நீடிக்குமா?  அல்லது பறிபோகுமா? பதற்றத்தில் அமைச்சர்கள்.!

தமிழக அரசில் சில அமைச்சர்களின் பழைய வழக்குகள் அவர்களின் எதிர்காலத்தை புரட்டிப்போடக் கூடிய அளவுக்கு உயர்ந்துள்ளன.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வென்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. அந்த வெற்றியை தக்கவைத்து 2026ம் ஆண்டும் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என ஸ்டாலின் தற்போது பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளார். அதற்காக வலுவான கூட்டணியை கட்டமைத்துள்ளார். ஆனால், அவரது ஆசை நிறைவேறுமா? மீண்டும் ஆட்சி கிட்டுமா? என்பது தான் தற்போது பெரும் கேள்வியாக உள்ளது. அதற்கு காரணம், அவரது அமைச்சரவையில் உள்ள நபர்கள் மீதுள்ள வழக்குகள் தான். அதுவே திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

ஹிட் லிஸ்டில் அமைச்சர்கள்:

தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் தற்போது வழக்குகளில் சிக்கி தவிக்கின்றனர். அவற்றின் மீதான விசாரணையின் முடிவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் சில அமைச்சர்கள் மீதான வழக்குகள் மத்திய புலனாய்வு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல அதிரடி சம்பவங்கள் தமிழக அரசியலில் அரங்கேறலாம் என கூறப்படுகிறது.

நெருக்கடியில் 6 அமைச்சர்கள்:

1. செந்தில் பாலாஜி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2. பொன்முடி: அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய விதமாக பேசிய வழக்கில் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த நீதிமன்றம், அதனை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

3.துரைமுருகன்: திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் முன்பு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை கீழமை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

4.MRK பன்னீர் செல்வம்: கடந்த 1996- 2001 மற்றும் 2006 - 2011 ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதனை ரத்து செய்த கீழமை நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. அனிதா ராதாகிருஷ்ணன்: வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு அமலாக்கத்துறையிடம் விசாரணையில் உள்ளது.

6. கே.என். நேரு: தமிழ்நாடு அமைச்சரவையின் மற்றொரு முக்கிய நபரான கே.என். நேருவின் சகோதரர் வீடுகளில் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தலை தப்புமா?

இதனால், சட்டமன்ற தேர்தல் நேருங்கும் நேரத்தில் யார் யார் பதவிகள் பறிபோகும்? யார் வெளியே இருப்பார்கள், யார் சிறைக்கு செல்வார்கள்? யார் தலை உருளும் என பெரிய கணக்குகள் ஓடிக்கொண்டுள்ளன. இதனால் அடுத்த சில மாதங்களிலேயே தமிழ்நாட்டில் தேர்தல் சூடு அனல் பறக்க தொடங்க வாய்ப்புள்ளது.