ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
தமிழகம்

முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னாள் ராணுவ வீரர்களின் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் என்ற புதிய திட்டட்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சுதந்திர தினத்தின்போது தனது உரையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடன் பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு மூலதனமாக 30 சதவீத மானியமும் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.
இந்த தொழிலை தொடங்குபவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி போன்ற பயிற்சிகளும் அரசு வழங்கும். பணியில் இருக்கும்போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
இந்த திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்த வாரிசுகள், கைம்பெண்கள் ஆகியோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க விரும்பும் 55 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள், மறுமணம் ஆகாத கைம்பெண்கள், பணியின்போது உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரரை முற்றிலும் சார்ந்திருக்கும் திருமணமாகாத மகள் அல்லது கைம்பெண் மகள் ஆகியோர் தங்களின் போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, முன்னாள் படைவீரர் அடையாள அட்டை, படைப்பணி சான்றிதழ், கல்வி சான்றிதழ், வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 20 என குறிப்பிடப்பட்டுள்ளது.