தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐக்கு மாற்றம்! தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 5,832 கோடி அபராதம்!

சென்னை

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐக்கு மாற்றம்! தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 5,832 கோடி அபராதம்!

தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

மேலும், தடையை மீறி தாது மணல் கொள்ளையடித்த தனியார் நிறுவனங்களால் அரசுக்கு ஏற்பட்ட ரூ. 5,832 கோடியை அவர்களிடம் இருந்து வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தாது மணல் அள்ளுவதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி தாது மணல் அள்ளுவதாக 2016ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

தமிழக தொழில்துறை தரப்பில், 7 தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததாகவும், ரூ. 5,832.44 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் இதனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் திங்கள்கிழமை காலை தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், சிறப்புக் குழு, தமிழக அரசுத் துறை செயலாளர்கள் ககன்தீப்சிங் பேடி, சத்யபிரத சாகு ஆகியோர் அளித்த அறிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து முழுமையாக விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளனர். அனைத்து ஆவணங்களையும் நான்கு வாரத்துக்குள் சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழக காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதுக்கிவைக்கப்பட்டுள்ள தாது மணல்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்ய அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.