40 சீட்கள் வரை பெற வேண்டும் என கூறிய தலைகள்.! எதற்கு திமுக - விடம் தோற்பதற்கா என பட்டென பேசிய அமித்ஷா. !

தமிழக அரசியல்

40 சீட்கள் வரை பெற வேண்டும் என கூறிய தலைகள்.! எதற்கு திமுக - விடம் தோற்பதற்கா என பட்டென பேசிய அமித்ஷா. !

2026 தேர்தலில் அதிமுக - விடம் அதிக சீட்களை கேட்டு நச்சரிக்கூடாது எனவும் அவர்கள் கொடுக்கக் கூடிய சீட்களில் ஜெயிப்பதற்கு என்ன வழி என யோசிக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைகளிடம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மேலும் அதிமுகவினர் பாஜகவுடன் இணக்கமான தொடர்பு வைக்காத நிலையில் அது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி இடம் பேச இருப்பதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுக பாஜக இணைந்து சந்திக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவோ கூட்டணி ஆட்சி என கூறிவரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் ஆட்சி என அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

இதனால், சமூக வலைதளங்களில் அதிமுகவினர் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. பொருந்தாக் கூட்டணி என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என பாஜகவினரை எச்சரித்திருக்கிறார் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா.

பாஜக - அதிமுக

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகம், கூட்டணி விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக சமீபத்தில் மதுரை வந்திருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. தொடர்ந்து நட்சத்திர விடுதி ஒன்றில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். அந்த கூட்டத்தில் அவர் பேசிய அரசியல் தொடர்பான பேச்சுக்கள் அதிமுகவிலும், பாஜகவிலும் பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.

அமித் ஷா

அமித் ஷா தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில், தமிழக பாஜகவின் முன்னணித் தலைவர்களிடம் அதிமுகவுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி தொடர்பாக சில அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளார். அந்த சந்திப்பின் போது, "அதிமுகவுடன் நாம் கூட்டணி வைத்திருந்தாலும் அது பொருந்தா கூட்டணியாகவே வெளியில் விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்கேற்ப அதிமுகவின் செயல்பாடுகளும் கட்டமைக்கப்படுகிறது. இதனால், அக்கட்சியின் தொண்டர்கள் நம்முடன் இணக்கமான தொடர்புகளை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் நீங்கள் பேச வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்கள் மூத்த தலைவர்கள்.

அதிமுக தலைமை

அதற்கு விளக்கமளித்த அமித் ஷா, "இது போன்ற தகவல்கள் டெல்லிக்கும் வந்துள்ளன. அதை பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம். அதிமுக தலைமையிடம் விரைவில் இது பற்றி விவாதிக்கத் திட்டமிருக்கிறது" என்றிருக்கிறார்.

அதிமுக கூட்டணி

இதனையடுத்து, "அதிமுக கூட்டணியில் அதிக சீட்டுகளை நாம் பெறவேண்டும். குறைந்தபட்சம் 40 சீட்டுகளிலாவது இந்த முறை பாஜக போட்டியிட்டால் தான் கணிசமான இடங்களைக் கைப்பற்ற முடியும்" என்று முன்னாள் தலைவர் ஒருவர் சொல்ல, அப்போது இடைமறித்த அமித் ஷா, "அதிக எண்ணிக்கையில் சீட் கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி தர முடியாது. அதிக சீட்டுகளை கேட்டு வலியுறுத்துகிற அளவுக்கு கட்சியை நீங்கள் வலிமையாக வைத்திருக்கவில்லை. கட்சி வலிமையாக இல்லாதபோது, அதிமுகவிடம் அதிக சீட் கேட்டு எப்படி பேரம் பேச முடியும்?

திமுக ஆட்சி

கட்சியின் வலிமை, வெற்றி பெறும் வாய்ப்பு, வெற்றி பெறக் கூடிய தொகுதிகள் எவை என்பது பற்றி ஒரு ஆழமான ரிப்போர்ட் எங்களிடம் இருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டுதான் அதிமுகவிடம் சீட் ஷேரிங் பேசப்பட்டிருக்கிறது. அதனால், அதிக சீட் கேட்கும் எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய இலக்கு, திமுக ஆட்சியை வீழ்த்துவது தான். அதிக சீட் வாங்கி, அதனை திமுகவிடம் இழக்க முடியாது. நீங்கள், கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அரசியல் செய்யாதீர்கள்" என்று கட் அண்ட் ரைட்டாகப் பேசியுள்ளார்.

தலைவர்கள் அதிர்ச்சி

இந்த அறிவுறுத்தல்களை பாஜக முன்னணித் தலைவர்கள் ஏற்றுக் கொண்டாலும், 'அமித் ஷா ஏன் இப்படி பேசுகிறார்?' என்று ஒருவருக்குள் ஒருவர் பேசிக் கொண்டனர். அதாவது, "அதிமுகவிடம் எல்லாவற்றையும் பேசி முடிவெடுத்து விட்டது தேசியத் தலைமை. அவர்கள் எந்தெந்த தொகுதிகளை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் ? அதில் நாம் போட்டியிட நினைக்கிற தொகுதி இருக்குமா? என்ற கவலையில் இருக்கின்றனர். அதிக எண்ணிக்கையைக் கேட்டு பெற்றால் தான் நமக்கான தொகுதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்து வரும் நிலையில், அமித் ஷாவின் அறிவுறுத்தல் அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது" என்கின்றனர் பாஜகவினர்.