சமூக வலைதளங்களில் மாஸ் காட்டும் போலீஸார். ! டிஜிபி சங்கர் ஜிவால் காட்டம். !

காவல் துறை

சமூக வலைதளங்களில் மாஸ் காட்டும் போலீஸார். ! டிஜிபி சங்கர் ஜிவால் காட்டம். !

சென்னை: தமிழ்நாடு காவல்துறையினர் தங்கள் தனிப்பட்ட சமூக வலைதள பக்கங்களில் காவல்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்கள் சீருடை அணிந்த புகைப்படங்களை பதிவிடக்கூடாது எனவும். அனுமதியின்றி யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி தரக்கூடாது என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எஸ்பி அந்தஸ்து மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக காவல்துறை அதிகாரிகள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக ஒரு சில அதிகாரிகள் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். மேலும் சில வழக்குகளின் விசாரணை குறித்த தகவல்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் உள்ளிட்டவை குறித்தும் பேசி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கும் அரசியல் பிரமுகருக்கும் மோதல் ஏற்பட்டது. அது தொடர்பாக தனது தனிப்பட்ட சமூக வலைதள பக்கங்களில் அந்த அரசியல்வாதி குறித்து காவல் அதிகாரி பதிவிட்டு வந்தார்.

மேலும் சில அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட சமூக வலைதள பக்கங்களில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வீடியோக்களையும் அங்கு தாம் மாற்றிய உரைகளையும் பதிவிட்டு வந்தனர். இதனால் தனிப்பட்ட சமூகவலைதள பக்கங்களில் காவல்துறை சார்ந்த கருத்துக்களை பதிவிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் எஸ்பி அந்தஸ்து மற்றும் அதற்கு மேல் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்.

அதில் காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதில்," சீருடை அணிந்து தனியார் நிகழ்வுகளில் கலந்து கொள்வது தவறு. சில போலீசார் தங்களது தனிப்பட்ட சமூக வலைதளங்களில் (Facebook, Instagram, YouTube, Twitter போன்றவை) காவல்துறையின் அதிகாரப்பூர்வ பணிகள் குறித்த தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சீருடை அணிந்து புகைப்படங்களை பதிவிட்டு வருவது கவலை தரத்தக்கதாக இருக்கிறது. இந்த செயல்கள் சேவை விதிமுறைகளை மீறுவதாக இருப்பதால் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் யூட்யூப் சேனல்கள், பாட்காஸ்ட் உள்ளிட்ட ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் பேட்டி வழங்கி, விசாரணை குறித்த தகவல்கள், பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் உள்ளிட்ட ரகசிய தகவல்களை பகிர்வதும் சேவை விதிமுறைகளுக்கு எதிரானது. அதிகாரிகள் யாரேனும் தனியார் நிகழ்வுகளில் கலந்து கொள்பவராகவோ ஊடகப் பேட்டிகள் வழங்குபவராக இருந்தால் அதற்கான அனுமதியை முன்கூட்டியே உரிய உயர் அதிகாரிகளிடம் பெற்றிருக்க வேண்டும்.