உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகும் வீரர்கள்.! ஐபிஎல் போட்டிகளில் விளையாட மறுப்பு.!
IPL 2025

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜுன் 11ம் தேதி தொடங்க உள்ளது.
ஐபிஎல் 2025 மீண்டும் தொடக்கம்:
இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தணிந்ததன் காரணமாக, பாதியில் நிறுத்தப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விரைவில் மீண்டும் தொடங்க உள்ளது. முன்னதாக, இறுதிப்போட்டி வரும் மே 24ம் தேதி நடைபெறவிருந்தது. திருத்தப்பட்ட அட்டவணையின்படி, வரும் 16ம் தேதி முதல் மீண்டும் போட்டிகள் தொடங்கி, மே 30ம் தேதியன்று இறுதிப்போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகளவில் ஒரே நாளில் இரண்டு போட்டிகளை நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கினாலும், வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் மீண்டும் இந்தியா திரும்பி வந்து போட்டியில் பங்கேற்க வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.
குறுக்கே வந்த WTC ஃபைனல்:
ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, வரும் ஜுன் மாதம் 11ம் தேதி தொடங்க உள்ளது. லாட்ஸில் நடைபெற உள்ள போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை தென்னாப்ரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக, இருநாட்டு வீரர்களும் திருத்தப்பட்ட அட்டவணைக்கான ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் என கூறப்படுகிறது. தென்னாப்ரிக்க வீரர்கள், ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி வரும் 25ம் தேதியுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி, தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால், நடப்பு ஐபிஎல் தொடரில் சில அணிகளுக்கு அது பெரும் பின்னடைவாக இருக்கும். குறிப்பாக பிளே-ஆஃப் வாய்ப்பில் முன்னணியில் உள்ள பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை அணிகளில் பெரிய தாக்கம் ஏற்படலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
கோப்பையை வெல்ல வேண்டும் என்ற பெங்களூரு அணியின் 18 ஆண்டுகால காத்திருப்பு, நடப்பாண்டு பலிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் ஒட்டுமொத்தமாகவே அந்த அணி வலுவானதாக திகழ்கிறது. அதில் ஹேசல்வுட் முக்கிய பங்காற்றி வருகிறார். ஆனால், சில வாரங்களுக்கு முன்பாக அவருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து தற்போது வரை மீண்டு வரவில்லை. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. ஆர்சிபி அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஆனால், அழுத்தம் நிறைந்த பிளே-ஆஃப் போட்டிகளிலும், அனுபவம் வாய்ந்த ஹேசல்வுட் பங்கேற்காவிட்டால் அது ஆர்சிபி அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளார். நடப்பு தொடரில் 10 போட்டிகளில் விளையாடி, 18 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். தென்னாப்ரிக்கா வேகப்பந்து வீச்சாள நிகிடி, WTC இறுதிப்போட்டிக்காக தாயகம் திரும்ப உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் அணியில் பேட்ஸ்மேன் ஆகவும், விக்கெட் கீப்பராகவும், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த ரியான் ரிக்கெல்டன் அபரிவிதமாக செயல்பட்டு வருகிறார். அதிரடியான பேட்டிங்கால் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை உறுதி செய்வதோடு, விக்கெட் கீப்பிங்கில் பாய்ந்து பாய்ந்து பந்துகளை பிடித்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்பிற்கான தென்னாப்ரிக்காவின் அணியில் ரிக்கெல்டனும் இடம்பெற்றுள்ளார். இதனால், அவரும் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. மும்பை அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் குறைந்தது ஒன்றில் வென்றால் தான் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த சூழலில் ரிக்கெல்டன் இல்லாதது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதுவரை ரிக்கெல்டன் 3 அரைசதங்கள் உட்பட 336 ரன்கள் குவித்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ்:
தொடர் வெற்றிகலை குவித்து வந்த டெல்லி அணி, கடந்த சில போட்டிகளில் தடுமாறி வருகிறது. இதனால், மீதமுள்ள 3 போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டில் வென்றால் தான் பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும். இந்நிலையில், டெல்லி அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் மீதமுள்ள போட்டிகளுக்காக, இந்தியா வரமாட்டார் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்க் 12 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதேபோன்று குஜராத் அணியில் உள்ள டேவிட் மில்லரும், உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்பிற்கான தென்னாப்ரிக்கா அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணியில் உள்ள மாக்ரோ ஜான்சென் மற்றும் ஜோஸ் இங்கிலிஷ் ஆகியோரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளனர்.