டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறி வெளியேறினார் விராட் கோலி.!
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பக் காலங்களில் தடுமாறினாலும் அப்போதைய கேப்டன் தோனியின் அபிமான வீரராக ஆதரவு பெற்றார். அந்த ஆதரவை சரியாகப் பயன்படுத்திய விராட் கோலி நாளடைவில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடத்தை நிரப்பும் அளவுக்கு பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்தார்.
குறிப்பாக 2013க்குப்பின் உலகின் அனைத்து வகையான மைதானங்களிலும் சூழ்நிலைகளிலும் அசத்திய விராட் கோலி தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதைப் பார்த்த தோனி 2014இல் கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி இந்திய அணியை முழுமையாக மாற்றினார்.
விடை பெற்ற கிங்:
அவரது தலைமையில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்தியா 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் ஐசிசி டெஸ்ட் அணியாக முன்னேறி வெற்றிகளைக் குவித்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்ற இந்தியா சரித்திர சாதனை படைத்தது. அந்த வகையில் மொத்தமாக 68 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி தலைமையில் இந்தியா 40 வெற்றிகளை குவித்தது.
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைக் குவித்த இந்திய மற்றும் ஆசிய கேப்டன் என்ற இரட்டை சாதனையை விராட் கோலி படைத்தார். இருப்பினும் அவரது தலைமையில் இந்தியா ஐசிசி உலகக் கோப்பையை வெல்லத் தவறியதால் விமர்சனங்கள் எழுந்தன. அதனால் 2022இல் கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்த விராட் கோலி சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார்.
தவறிய வரலாறு:
ஆனால் சமீபத்திய வருடங்களாகவே வயது காரணமாக தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கத் தடுமாறிய அவர் கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களில் அசத்தவில்லை. அதிலும் ஆஸ்திரேலியாவில் முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் எஞ்சிய போட்டிகளில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தொடர்ந்து அவுட்டானார். மறுபுறம் ரோஹித் சர்மா அவரை விட மிகவும் மோசமாக பேட்டிங் செய்து வந்தார்.
அதனால் சமீபத்தில் ஓய்வு பெற்ற ரோகித் சர்மாவின் நண்பனாக விராட் கோலியும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற்றுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதைப் போல அவர்கள் மீண்டும் ஜோடியாக டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதை விட இதுவரை 123 போட்டிகளில் விராட் கோலி 31 அரை சதம் 20 சதம் உட்பட 9230 ரன்களை 46.85 சராசரியில் குவித்துள்ளார். தற்போது ஓய்வு பெற்றுள்ளதால் 770 ரன்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றை விராட் கோலி தவற விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.