மீண்டும் ஐபிஎல் தொடர்.! வரும் சில நாட்களில் IIPL போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு.!

கிரிக்கெட்

மீண்டும் ஐபிஎல் தொடர்.!  வரும் சில நாட்களில் IIPL போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு.!

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஐபிஎல் 2025 போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக கடந்த 8ம் தேதி நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால் ஐபிஎல் 2025 போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

பெரும்பாலான உரிமையாளர்கள் தங்கள் வீரர்களின் கவலை மற்றும் உணர்வுகளையும், ஒளிபரப்பாளர், ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துக்களையும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் உரிய ஆலோசனைக்குப் பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்தது. இதற்கிடையே ஒரு வாரத்துக்கு பிறகு எந்தவித பதற்றமும் இன்றி அமைதியாக காணப்படும் தென்மாநிலங்களான சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இது தொடரபாக நேற்று இரவு பேசிய ஐபிஎல் தலைவர் அருண் துமல், ''போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் அணிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் ஆகியோரிடம் பேசி ஐபிஎல் போட்டிகளை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்வோம். மிக முக்கியமாக மத்திய அரசிடம் இது தொடர்பாக ஆலோசிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

பிசிசிஐ, ஐபிஎல் அதிகாரிகள் ஆலோசனை

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை மீண்டும் தொடங்குவது குறித்து பிசிசிஐ அதிகாரிகளும், ஐபிஎல் நிர்வாக குழுவினரும் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி இன்று நடைபெறும் கூட்டத்தில் ஐபிஎல்லில் மீதமிருக்கும் போட்டிகளின் அட்டவணை உறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல்லில் விளையாடும் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளதால் அதற்குள் ஐபிஎல் போட்டிகளை தொடங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அநேகமாக அடுத்த வாரம் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் வகையில் அட்டவணை தயார் செய்யப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.